இன்றைய விருந்து

  • அயரா விழிப்புணர்வு – 6 / 7

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு – 6 / 7

    FFC – 39

    21-12-2014—ஞாயிறு

    (Constant Awareness)

    அயரா விழிப்புணர்வின் மேன்மையினைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். சமையல் அறையில் பணிபுரிவது, மகிழுந்து ஓட்டுவது, புலன் இன்பத்தைத் துய்ப்பது ஆகியனவற்றில் எல்லாம் விழிப்புணர்வு தேவை என்று பார்த்தோம். கண்கள் விழித்திருக்கும் போது, அதாவது விழிப்பு நிலையிலேயே அயராத விழிப்பு நிலை தேவை என்று பார்த்தோம். இது உலகியல் வாழ்க்கை வாழ்வதற்கு மட்டும் தேவையானது போல் தெரியலாம். ஆன்மீக வாழ்விற்கென்று அயரா விழிப்பு நிலை பற்றி ஒன்றும் சொல்லாதது போல் இருக்கலாம்.

    உலகியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை என்றுத் தனித்தனியாகக் கிடையாது. ஆன்மா தன் பழிச்செயல்களைத் தூய்மை செய்து பிறவிப்பயனை எய்துவதற்காக இவ்வுலகில் பிறவி எடுத்துள்ளது. ஆகவே அயரா விழிப்புநிலை என்பது, அதன் இறுதியான பொருளில்(Ultimate sense) “மயக்கம் நீங்கி தன்னுடைய மூலநிலையை மறவாது இருத்தலேயாகும்.”

    ஆன்மா தன் மூல நிலையை உணரும் போது என்ன உணரும்? அதனை இப்போதே வேதாத்திரியம் கருத்தியலாகக் கூறிவிட்டது. அதனை உறுதி படுத்த செய்முறையில் (தவத்தில்)வெற்றி பெற்றாக வேண்டும். அப்போதுதான் மனிதனின் பண்பேற்றம் முழுமையடைந்து நிரந்தரமாக நிலைக்கும். ஆகவே மனிதன் கருத்தியலாக பெற்ற இறைஞானத்தை நினைவில் கொண்டு பழகி வர வேண்டும். இறைஞானம் என்ன கூறுகின்றது?

    எல்லாம் வல்ல ‘இறை’ என்கின்ற மெய்ப்பொருளே எழுச்சி பெற்று பிரஞ்சமாகி, அதில் இவ்வுலகமாக. உயிர்களாக தன்மாற்றத்தால் காட்சி அளிக்கின்றது. அந்தக் காட்சியில் இறையின் தன்மையான அறிவு வெளிப்படுகின்றது. சுத்தவெளி அணுவாக இயங்கி பஞ்சபூதங்களாகி, பிரபஞ்சமாகி உலகமாக, உயிர்களாக, உயிரின் அலையான மனமாக, ஐயறிவாக தன்மாற்றம் அடையும் வரை இறையின் தன்மை வெளிப்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. ஆனால் ஆறாம் அறிவாக மலர்ந்த போது இறையின் தன்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

    இறையுணர் ஆன்மீகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எப்போதும் விழிப்பு நிலை கொண்டு பிறருக்குத் துன்பம் தராத செயல்களையே எக்கணமும் செய்து கொண்டிருக்கின்ற விழிப்பு நிலையே தான் மெய்ஞானம் ஆகும். இறையே நானாகவும், சமுதாயமாகவும், எல்லாமாகவும் உள்ளது என்கின்றது இறைஞானம். இந்த நினைப்பை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அயரா விழிப்பினால்தான், அறிவுமுழுமையின் ஐந்து நலப் பேறுகளான நுண்மான நுழைபுலன், ஏற்புத்திறன், தக அமைதல், பெருந்தன்மை, ஆக்கத்திறன் ஆகியவைகளை அடையமுடியும். மேலும் ஐந்து பயன்களான இசைவு, நிறைவு, மகிழ்வு, மெய்யறிவு, அமைதி ஆகியவைகளும் பெறமுடியும். இந்த ஐந்து நலப் பேறுகள் மற்றும் பயன்களுக்கும், அயரா விழிப்புணர்விற்கும் எவ்வாறு தொடர்பு உள்ளது என்று பயிற்சியாகச் சிந்தனை செய்து பார்க்கலாமே.

    மனவளக்கலையின் ஐந்து நலப் பேறுகள் எப்போது கிட்டும்?
    மனவளக்கலையின் வடிவமைப்பில் மூன்று நிலைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று செய்முறை பயிற்சிகள். இரண்டாவது நிலை மூன்று வளர் நிலைகள் உள்ளன. அதில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ள எண்ணம், சொல், செயலில் விழிப்புடன் இருத்தலுக்குப் பிறகு தான் ஐந்து நலப்பேறுகள் இடம் பெற்றுள்ளன. எனவே அயராவிழிப்பு நிலையை எட்டாது அறிவு ஐந்துநலப் பேறுகளையும் அடைய முடியாது. எனவேதான் அயரா விழிப்பு நிலை அறிவின் உச்சநிலையான ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    1) நுண்மான் நுழை புலன்(Perspicacity)—– இதற்கு அயரா விழிப்பு நிலைத் தேவையில்லையா? இல்லையென்றால் நுண்மாண் நுழை புலன் என்கின்ற பேறு கிட்டுமா? இந்நிலை வேண்டாமா அன்றாட வாழ்க்கைக்கு? நுண்மாண் நுழை புலன், அயரா விழிப்புநிலை வேறு வேறா?

    2) ஏற்புத்திறன்(Receptivity) —-அயரா விழிப்பு நிலை இல்லையெனில் ஏற்புத்திறன் எப்படி கிட்டும்?
    3) தக அமைதல்(Adaptibilty) — அயரா விழிப்பு நிலை இல்லையெனில் தக அமைதல் எவ்வாறு கிட்டும்?

    4) பெருந்தன்மை(Magnanimity—- அயரா விழிப்பு நிலை இல்லையெனில் பெருந்தன்மை எவ்வாறு கிட்டும்?

    5) ஆக்கத்திறன்(Creativity) —— அயரா விழிப்பு நிலை இல்லையெனில் ஆக்கத்திறன் எவ்வாறு கிட்டும்?

    
    மனவளக் கலையின் ஐந்து நலப் பயன்கள் எவ்விதத்தில் கிட்டும்?

    அயரா விழிப்பு நிலை எய்தி, ஐந்து நலப்பேறுகள் பெற்ற பின்னர்தான் ஐந்து பயன்களையும் பெற முடியும்.

    1) இசைவு(Harmony)—– அயரா விழிப்பு நிலை இல்லையெனில் இசைவு எப்படி கிட்டும்?

    2) நிறைவு (Satisfaction)—- அயரா விழிப்பு நிலை இல்லையெனில் நிறைவு எப்படி கிட்டும்?

    3) மகிழ்வு(Happiness)—- அயரா விழிப்பு நிலை இல்லையெனில் மகிழ்வு எப்படி கிட்டும்? அயரா விழிப்பு நிலையே மகிழ்வு தானே!

    4) மெய்யறிவுWisdom)—- அயரா விழிப்பு நிலை இல்லையெனில் மெய்யறிவு எப்படி கிட்டும்? அயரா விழிப்பு நிலையே அறிவின் இறுதியான உயர்ந்த நிலைதானே ! அறிவின் இறுதியான உயர்ந்த நிலையே மெய்யறிவுதானே!

    5) அமைதி(Peace) —— அயரா விழிப்பு நிலை இல்லையெனில் அமைதி எப்படி கிட்டும்? அயரா விழிப்பு நிலையே அறிவின் இறுதியான உயர்ந்த நிலை என்கின்றபோது அதுதானே பூர்வீக நிலை. அதுதானே அமைதி நிலை !

    குறிப்பு:- ஒவ்வொரு பேறு, பயன் ஆகியவற்றின் வரையறையை அயரா விழிப்பு நிலை வரையறையுடன் ஒத்துப் (Mapping) பார்த்து அயரா விழிப்பு நிலையின் தேவையை உணர்ந்து, அதன் மேன்மையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ”திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என்று உறுதி அளித்த வள்லளார் தான் தன் பூதவுடலை விட்ட பின்னர் வேதாத்திரி மகரிஷியைத் தேர்ந்தெடுத்து, அவரது உடலில் பத்து வருடங்கள் தங்கி உலக மக்களை திருந்திட அஞ்சாமல் சொல்ல வேண்டியதை மகரிஷியின் வழியாக தெரிவித்து உலக மக்களைத் திருத்தி உய்யவைக்க திட்டமிட்டது இயற்கை என்பதனை நினைவு கூர்வோம். ஒருவருடைய அயரா விழிப்பு நிலையை, தானே, சரிபார்த்துக் கொள்ள ஒரு யுக்தியைக் கையாளலாம்.

    அஃதாவது:

    ”காலையில் உறக்கத்திலிருந்து எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை யார் எங்கிருந்தாலும், எப்பணியில் ஈடுபட்டிருந்தாலும் ஒரு மணிக்கு ஒரு முறை ”நான் இந்த ஒரு மணிநேரமும் இறையினுடைய அருளுக்குப் பாத்திரமாக இருந்தேனா? ” என நம்மையே சோதித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அறிவு அயரா விழிப்பு நிலையிலேயே இருக்க பேருதவியாக இருக்கும். இறையருளுக்கு பாத்திரமாகுதல் வேறு, அயரா விழிப்பு நிலை வேறன்று. இரண்டுமே ஒன்றுதான்.

    புதனன்று (24-12-2014) தொடர்வோம். வாழ்க வளமுடன்

    Loading

  • அயரா விழிப்புணர்வு – 5 / 7

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு – 5 / 7

    FFC – 38

    17-12-2014—புதன்

     (Constant Awareness)

    தன்னைத் திருத்திக் கொள்வது மிகவும் எளிது. யாரையும் யாரும் திருத்த முடியாது. அவரவர்களே திருந்தினால்தான் முடியும். எனவே பிறரைத் திருத்த முயல்வதை விட்டு விட்டு தன்குறையைத் திருத்திக் கொள்வதில் வெற்றி பெற்றால், ஒருவேளை அவர்களும் திருந்தலாம். “தன்குறையைக் காண்பதே ஞானம்” என்கிறார் அண்ணல் காந்தியடிகள். இது பற்றி நாம் ஏற்கனவே 11-11-2014 மற்றும் 12-11-2014 ஆகிய இரு தினங்களில் FFC-14-FFC-15 இல் சிந்தித்துள்ளோம். மீண்டும் வேண்டுமென்றால் பெட்டகத்திற்குச் சென்று பார்க்கலாமே.

    இத்தருணத்தில் கவிதை வடிவிலே மகரிஷி அவர்கள் கூறியுள்ளதை அறிந்து மகிழ்வுறுவோம்.

    தன்குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம் (02-12-1983)

    தன் குற்றம் குறைகள்தமைத் தன்னுள் ஆய்ந்து,
    தான்கண்டு தனைத்திருத்தும் தகைமை வந்தால்,
    ஏன் குற்றம் பிறர் பிறர் மீது சுமத்தக் கூடும்?

    ஏதேனும் கண்டாலும் மன்னித்தாலும்,

    மேன்மைக்கே மனம் உயரும்; பிறர் தவற்றால்
    மிகவருத்தம் துன்பமது வந்த போதும்,
    நன்மைக்கேயாம்; செய்த பாபம் போச்சு!
    நான் கண்ட தெளிவு இது. நலமே பெற்றேன்.” ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    என்று வாழ்த்தி வாழ்வோம் என்கிறார் வாழ்வியல் உண்மைகளைக்கூறும் வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள். “தன்குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம் என்கின்ற” வாழ்வியல் சூத்திரத்தை அறிந்து கொள்ளும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.

    ஏனெனில் அறிவு தன்னைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதால் அதற்கு மகிழ்ச்சி உண்டாகின்றது. உள்ளம் பூரிக்கின்றது. ஆனால் அந்நல்வழி குணநலனைப் பெற்றிராத, ஏற்கனவே அதனைப் பழகாத மனம் அறிவிற்கு ஒத்துழைக்க வேண்டும். ஆரம்பத்தில் மனம் ஒத்துழைக்காமல் இருக்கலாம். “நான் ஏன் பிறர் குற்றங்களைப் பெரிது படுத்தாது மன்னிக்க வேண்டும்?” போன்ற பல வினாக்களை எழுப்பி, அறிவுடன் ஒத்துழைக்காமல் இருப்பதற்கு நம்மையே பல கேள்விகள் கேட்கும்.

    இதே போன்று எப்பொழுதெல்லாம் மனிதன் நல்வழிக்குத் திரும்ப முயற்சி செய்கின்றானோ அப்போதெல்லாம் மனம் ஒத்துழைக்காது. மனதைக் குறைகூறுவதில் பயனில்லை. பழக்கப்பட்ட உடல் செல்கள், பழகிவிட்ட மனம் மீண்டும் பழக்கத்தை மாற்றி விளக்க வழியே நல்வழிக்கு வருவதற்கு தடைகளாக உள்ளன. அதனால் எந்த ஒரு எண்ணத்திற்கோ, அல்லது எந்த ஒரு பழக்கத்திற்கோ, ஆராய்ச்சி செய்யாது, சிந்திக்காமல் ஆளாகிவிடக்கூடாது. அடிமையாகிவிடக்கூடாது. ஏனெனில் மனம் பழகிவிட்டது. அதனால் சில சமயங்களில் உடல் செல்கள் கூட ஒத்துழைக்காது. மனம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் அதற்கு உகந்த பதிலைச் சொல்ல வேண்டும். இந்தச் சூழலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உலகமாந்தரை நினைத்து மகரிஷி அவா்கள் மொழிந்துள்ளதை இங்கே நினைவு கூர்வது நல்லது.
    “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார் – Man is struggling between habit and wisdom.” மனிதனுக்கு சில வரையறைகள் உள்ளன. Man is a bundle of thoughts. Man is a social animal. மகரிஷி அவர்கள் மனிதனுடைய மற்றொரு வரையறையாக கூறுவது:- “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கிறார். வேறு எந்த சீவனுக்கும் இந்த வரையறை பொருந்தாது மனிதனுக்கு மட்டுமே பொருந்துகின்ற வரையறை இது.
    ஏனெனில் மற்ற சீவன்களுக்கு விளக்கங்கள் தேவையில்லை. மற்ற சீவன்கள் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும் அவை அதற்கென அன்று இயற்கை வைத்துள்ள வழியே வாழ்ந்து வருகின்றன. தங்கள் வாழ்க்கை நெறிகளை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் மற்ற சீவன்களுக்கு விளக்கங்கள் தேவையில்லை. மேலும் மற்ற சீவன்கள் ஐந்தறிவு அல்லது அதற்கும் கீழ் நிலையில்தான் உள்ளன. ஆனால் மனிதனின் ஆறாம் அறிவு ஐந்தறிவு நிலையிலிருந்து உயர்ந்துள்ளது. ஆதி மனிதன் தோன்றியபோது வாழ்ந்த நிலையிலேயே மனிதன் இன்று வாழவில்லை. நெறிகளை மாற்றிக் கொண்டான். ஆகவே மனிதன் இயற்கை வகுத்துள்ள வழியே வாழவில்லை. அங்கேதான் மனிதனுக்கு இயற்கை வழி வாழ்ந்து வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் அறிவுரை விளங்கங்கள் தேவைப்படுகின்றன. அந்த விளக்கங்கள் மனிதன் பெற்றாலும் விளக்கங்கள் வழியே வாழமுடியாமல் பழைய தீமையளிக்கக் கூடிய பழக்கங்கள் வழியே வாழ்ந்து வருவதை மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.
    இந்நிலைதான், இது வரை எவ்வளவோ அறநூல்களை இயற்கை அளித்திருந்தாலும், மனிதகுலத்தால் இன்னும் அவலநிலையிலிருந்து மீண்டு வரமுடியாதற்குக் காரணமாக உள்ளது. விளக்கத்தையும் மனிதன் விட முடியவில்லை. காரணம் அவன் ஆறாம் அறிவுடையவனாயிற்றே! விளக்கம் பெறுவதற்கும் அவனுக்கு பெரும் ஆசையுள்ளது. ஆனால் பல்லாயிரம் பிறவிகளாக அவனது கருமையம்(ஆன்மா) சுமந்து வந்த விளக்கமில்லாதப் பதிவுகளை இறக்கி வைக்கவோ அல்லது துடைக்கவோ முடியவில்லை. வேதாத்திரியம் கல்வி, எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்கறிவு. இயற்கைத் தத்துவ அறிவு ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூறியது, இப்போது பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை ஒழுக்கப் பழக்கறிவு, இயற்கைத் தத்துவ அறிவும் மணித மாண்புக்கல்வியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது,

    எனவே விளக்கங்களும், சத்சங்கமும் தான் மனதிற்கு விழிப்பு நிலையில் பழகுவதற்கு பெரும் துணையாக இருக்கும். தன்குற்றம் உணர்வதிலும், பிறர் குற்றம் மன்னிப்பதிலும் அயராத விழிப்பு தேவை. அப்படி விழிப்புடன் இருந்து இருந்துப் பழகி, சில நேரங்களில் தவறினாலும், தொய்வு ஏற்படாது முயற்சி செய்து, செய்து பழகப்பழக, பின்னர் அந்நல்வழிக் குணநலன் கைவல்யாமாகும். சித்திரமும் கைப்பழக்கம் என அவ்வைத் தாய் கூறியுள்ளது போல் எந்த தீய பழக்கத்தையும் நற்பழக்கமாக மாற்றி அமைத்திட பழகவேண்டும். அதோடு அவ்வைத்தாய் கூறுவது போன்று அறிவினரைச் (அறிவை அறிந்த குருவைச்) சேர வேண்டும். அடுத்த ஞாயிறன்று சந்திப்போம். வாழ்க வளமுடன். 

    Loading

  • அயரா விழிப்புணர்வு – 4 / ?

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு – 4 / ?

    FFC – 37

    (Constant Awareness)

    14-12-2014–ஞாயிறு

    சென்ற வாரம் புதனன்று மனவளக்கலையின் மூன்று வளர்நிலைகளில் முதல் இரண்டு நிலைகளான “மனம் விரிவு பெறுதல் மற்றும் இயற்கை விதி அறிதல் ஆகியவைப்பற்றிச் சிந்தித்தோம். இன்று மூன்றாவதான வளர்நிலையிலிருந்து சிந்தனையைத் தொடங்குவோம். மூன்றாவது வளர்நிலை ‘எண்ணம், சொல், செயல்’ ஆகியவற்றில் விழிப்புடன் இருத்தல். எவ்வாறு விழிப்பில்(விழிப்பு நிலையில்) விழிப்பாக இருப்பது பற்றிச் சிந்திப்போம்.

    1) எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் விழிப்புடன் இருத்தல்.

    இருபத்து நான்கு மணிநேரத்தில் எட்டு மணிநேரம் உறக்கத்திற்காக செலவழிந்து விடுகின்றது. மீதமுள்ள பதினாறு மணி நேரம் விழித்துக் கொண்டுதான் இருக்கிறான் மனிதன். அப்போதுதான் அவனுக்கு தவறுகள் செய்யும் சிக்கல்கள் வருகின்றன. தூங்காமல் இருக்கும் போது விழித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அவனுக்கு உணர்வும் உள்ளது. அப்படியிருக்கும் போது, அறிவிற்கு அது உணர்வு நிலைதான் என்றாலும் அப்போதும் அதற்குப் பிரத்தியேகமான விழிப்பு உணர்வு வேண்டும் என்கிறார்.

    அதனை அயரா விழிப்பு நிலை என்கிறார். அதனை அறிவிற்கான வெளிச்சம் என்கிறார். அந்த வெளிச்சத்தில் வாழ்க்கையை நடத்தச் சொல்கிறார். பேரறிவின் தன்மாற்றத்தில், மனித அறிவு ஞானத்தைப் (அறிவையறிந்த தெளிவு) பெறுவற்கான பயணத்தில், அறிவு அறிந்த அனுபவங்களில் (knowledge) அயரா விழிப்புணர்வு என்பது உச்ச நிலை என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். “Awareness is a higher stage of knowledge in its evolutionary progress towards Wisdom” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மனிதன் உறங்கும் போது தவறுகள் செய்ய முடியாது. விழித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவன் தவறுகள் செய்கிறான். எனவேதான் கண் விழித்துக்கொண்டு, உணர்வுகள் உள்ள நிலையில் அயரா விழிப்பு நிலை வேண்டும் என்கிறார். இந்த அயரா விழிப்பு நிலையை மேன்மையாகக் கூறுகிறார். இந்த நிலையை ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள். இந்த அயரா விழிப்பு நிலையைத்தான் மெய்ஞானம் என்கிறார்.(It is this; state of constant Awareness. that is wisdom). அறிவிற்குள்ள விழிப்புணர்வு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் (School of thoughts) இருக்கின்றன.

    ஒன்று materialistic awarness. மற்றொன்று Esoteric Awareness. Materialistic awarenss என்பது உலகியல் சம்பந்தப்பட்டது. சமையல் அறையில் சமைப்பதிலிருந்து ஆய்வுக் கூடத்தில் செய்யும் ஆராய்ச்சி வரையுள்ள விழிப்புணா்வாகும். ஆனால் “Esoteric Awareness” என்பது இயற்கையின் இரகசியங்களை அறிவதிலும், அறிந்து அதுபோல் வாழ்க்கை வாழ்வதிலும் வேண்டிய விழிப்புணர்வாகும். மகரிஷி அவர்கள் கூறுவது “ஆன்ம விழிப்புணர்வு–Spiritual awakening” தரும் Esoteric Awareness பற்றி. வேதாந்த நூல்கள் கூறுதாவது:- “ IN Awakened Consciousness, Awareness is at its Zenith.” “Awareness Is God” என்கின்றது வேதாந்தம். இதுபற்றி வேறொரு சமயத்தில் விரிவாகப் பார்ப்போம்.

    இந்த உயர்ந்த விழிப்பு நிலை வந்து விட்டால் மனிதன் பிறர் தவறுகளைக் குறையாக எண்ணமாட்டான். அதில் விழிப்புணர்வோடு இருப்பான். அப்படிக் குறைகளாக இருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டாமல், “அவர்களுடைய அறிவு நிலை அவ்வளவுதான். அதற்கேற்ப அவர்கள் செயல்களைச் செய்து வருகிறார்கள். அதற்கு நாம் எந்த விதத்தில் அவர்களுக்கு உதவ முடியும்” என்கின்ற உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவான். தன்னுடைய செயல்களில் குற்றம் இருக்காது. மாறாக தன்னுடைய குற்றம் கண்டு தன்னைத் திருத்தி எப்போதும் நன்மையே செய்யும் தகைமை அவனுக்கு வந்துவிடும் என்கிறார் வாழ்வியல் விஞ்ஞானியும் மற்றும் அறிவியல்(அறிவு+இயல்=அறிவியல்) விஞ்ஞானியுமான, அறிவியலாளர் (Scientist Science of Consciousness) வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    விஞ்ஞானத்தில் இன்றுவரை, அறிவு பற்றிய விளங்கங்கள் இல்லாமலே விடுபட்டுள்ளது. “அறிவே தெய்வம்”, இறை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது, “எல்லாவற்றையும் அறியக்கூடியது இறை” என்று ஆன்மீக நூல்கள் கூறியிருந்தாலும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் அளித்துள்ள அறிவைப் பற்றிய விளக்கம்தான் மெய்ஞானத்தை தெளிவாக்குகிறது. மெய்ஞானத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. வேதாத்திரியத்தின் தோற்றம் மெய்ஞான உலகில் ஒரு மைல்கல். பிரபஞ்ச உருவாக்கம் பற்றி விஞ்ஞானத்தில் இல்லாத தெளிவான விளக்கம் வேதாத்திரியத்தில் உள்ள அறிவைப்பற்றிய விளக்கத்தால் கிடைத்துள்ளது. ஆகவே அறிவைப்பற்றிய தெளிவான அறிவுபூர்வமான விளக்கங்களை அளித்துள்ள மகரிஷி அவர்களை (அறிவு+இயல்=அறிவியல்) அறிவியலாளர், அறிவியல் விஞ்ஞானி என்கிறோம். சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகப் புகழ் விஞ்ஞானி வாயிலாக “விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைய வேண்டும்” என்று ஏற்கனவே இயற்கை விருப்பம் தெரிவித்திருந்ததை, அவா்களுக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, நடத்தி பூர்த்தி செய்து விட்டது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைக்கப்பட்டு விட்டது. அத்வைத விஞ்ஞானம் (Advaidic Science) உருவாக்கிவிட்டது இயற்கை.

    விழிப்புணா்வின் மேன்மையைப் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கும் போது, “தன்குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம்” என்று மகரிஷி அவர்கள் கூறுவதனை அடுத்த புதன் கிழமையன்று நினைவு கூர்வோம். புதன்கிழமை மீண்டும் சந்திப்போம். வாழ்க வளமுடன்.

    Loading

  • அயரா விழிப்புணர்வு – 3 / ?

     

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு – 3 / ?

    FFC – 36

                                                                                                 10-12-2014–புதன்

    (Constant Awareness)

    குறிப்பு: சென்ற விருந்தில்(FFC-35, 07-12-2014) சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனையும் படித்துப் பயன் பெறவும். புதிதாக சேர்க்கப்பட்டவை ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். வாழ்க வளமுடன். இப்போது இன்றைய விருந்திற்குச் செல்வோம்.
    நான் யார் என்கின்ற வினாவிற்கு பதிலைக் கருத்தியலாகவும், அதற்கான பயிற்சியினை செய்முறையாகவும் கொடுத்து வருகின்றது மனவளக்கலை. அறிவிற்கு வேண்டிய மூன்று வளர் நிலைகளை ஏற்படுத்தும்படியாக மனவளக்கலையை வடிவமைத்திருக்கிறார் வாழ்வியல் விஞ்ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள். அவையாவன:

    1) மனம் விரிவு பெறுதல்.

    மனம் விரிவு பெற வேண்டும். அப்படியென்றால் என்ன? மனம் என்பது விரிவடையக்கூடிய Elastic பொருளா? தற்போது மனம் குறுகியுள்ளது. தான் தன் குடும்பம் என்கின்ற அளவிலேதான் உள்ளது மனதின் நிலை. ஆனால் வாழவைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்தின் மீது அக்கறை கொள்ளும் அளவிற்கு மனம் இன்னும் விரியவில்லை இது வரை. ஆனால் மனவளக்கலையின் வாயிலாக, மனதை, அதனுடைய மூலம் (origin) வரை விரியச் செய்து அந்த மூலத்திற்குள் இருக்கும் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொள்ளும் அளவிற்கு இயற்கை இப்போது வழிவகை செய்து வருகின்றது.

    மனம் குறுகியுள்ளது என்றால், தன்முனைப்பால், “தான்”. “தனது” என்கின்ற இரு எண்ண கோடுகளைக் உருவாக்கிக் கொண்டது என்கிறார் மகரிஷி அவர்கள். “தான்” “தனது” என்பது வெறும் எண்ணக் கோடுகள் தானே தவிர, உண்மையில்  –இயற்கையில் அவ்வாறு இல்லை. மனிதனைத்தவிர மற்றவைகள் பிறர்க்காகத்தான் வாழ்கின்றன.

    மரம் தனக்கென கனிகளை வைத்துக் கொள்வதில்லை.  வைத்துக்கொண்டால் பழம் அழுகிவிடும்.  பசுவை எடுத்துக்கொள்வோம். பசு தனக்காக பாலை உற்பத்தி செய்துகொள்வதில்லை.தன் கன்றிற்கு கொடுப்பதுடன் மனிதனுக்கும் கொடுக்கிறது.  பசுவின் மடியிலுள்ள பாலை அளவுக்கு அதிகமாக கன்று மட்டுமே பருகினாலும்   கன்றிற்கு பேதியாகும்.  பசு மடியில் பாலை கரக்காமல் விட்டு விட்டாலும் பசுவிற்குத் துன்ப உணர்வு ஏற்படும்.

    இயற்கையில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களுக்கும் “தான்”, “தனது” என்கின்ற எண்ணக்கோடுகள் இல்லாமையால் துன்பங்கள் இல்லை. இப்படி இயற்கை அமைப்பு இருக்கும் போது, மனிதன் மட்டும் இயற்கையைப் பற்றி  அறியாத நிலையில்  தன்முனைப்புடன், “தான்” “தனது” என்கின்ற இரு எண்ணக் கோடுகளுடன் இருப்பதால் அந்த இரண்டு தம்பதிகளுக்குப் பிறக்கும் ஆறு அவலக்குழந்தைகள் தான் பேராசை, சினம். கடும்பற்று, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகியவையாகும் என்கிறார் இயற்கையியல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வேதாத்திரியம் ௬றும் ”தான்“ “தனது“ என்கின்ற தன்முனைப்பு விஞ்ஞானத்தில் (Science of Ego) இயற்கையைப் பற்றியும் உள்ளது. மனித வாழ்க்கையைப் பற்றியும் உள்ளது. இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவின் தன்மாற்ற நிகழ்ச்சியைப்பற்றிய விஞ்ஞான உண்மையும் உள்ளது.

    அதே நேரத்தில் மனிதனின் வாழ்க்கைச் சிக்கலுக்குக்கான அறிவு பூர்வமானக் காரணத்தையும் குறிப்பிடுகிறார். ஆகவே மகரிஷி அவர்களை இயற்கையியல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞானி என அழைத்து மகிழ்வதோடு மட்டமல்லாது, அதே நேரத்தில், அந்த மகிழ்ச்சி இந்த வாழ்வியல் கல்வி, உலக மக்களிடையே பரவிட ஊக்கத்தையும் அக்கறையையும் நமக்கு அளிக்குமாக. உலக மக்கள் அனைவரும் தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவித்து வளமுடன் வாழட்டும்.

    சிந்திக்கவும் கீதாசாரம் கூறுவதை.

    ”எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றவருடையதாகின்றது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்” இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்” என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.)

    விளக்கம்:- தந்தைக் கட்டிய வீடு தந்தைக்குப் பிறகு மகனுக்கு சென்று விடுகின்றது. மகனுக்குப்பிறகு பேரனுக்குச் சென்று விடுகின்றது. தந்தைக் கட்டிய வீட்டினை, இப்பூவுலகத்தைவிட்டுப் போகும் போது தந்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் தந்தை முயற்சி செய்தால் வீட்டிற்கெல்லாம் வீடாகிய வீடு பேற்றினை மனவளக்கலையால் அறம். பொருள். இன்பம் ஆகிய மூன்றினையும் அனுபவித்து பெறுதற்கெல்லாம் அரிய பேறான வீடு பேற்றினை அடையாலாம். வாழ்க மனவளக்கலை. வளா்க மனவளக்கலை. வாழ்க மனவளக் கலைஞர்கள். வளர்க மனவளக் கலைஞர்கள்.

    இந்த உண்மையை அறிவு அறியாததால் மனம் குறுகி நிற்கின்றது. பாவம் அறிவு என்ன செய்யும்? பரிணாமக் கசட்டினை அகற்றுவதற்கே அதற்குப் பல பிறவிகள் தேவையிருக்கின்றது. பரிணாமக் கசடு அகன்றால்தான் புலன்மயக்கம் தீரும். அந்த நிலையில்தான் கீதாசாரம் விளங்க ஆரம்பிக்கின்றது. தின்றுத் திரிந்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அறிவை விழித்தெழச் செய்திருக்கின்றது வேதாத்திரி மகரிஷியின் வாயிலாக இயற்கை. பரிணாமக் கசடாலும், புலன்மயக்கத்தால் மனதிற்கு, அறவே வேண்டா குணங்களானப் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய அறுகுணங்கள் ஏற்பட்டுவிட்டன.

    இதன் விளைவு செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதிப்படி விளைவு தனக்கேத் துன்பங்கள் வரும். பிறர்க்கும் துன்பம் வரும். ஆகவே மனதை விரிவு பெறச் செய்ய வேண்டும். இதற்கான பயிற்சியாக உயிர் மீது தவம் இயற்றும் தவமுறை வகுத்துக் கொடுத்து, உடலளவிலே குறுகியிருக்கும் மனதை இப்பிரபஞ்சம் வரையும், அதற்கும் மேலாக எங்கிருந்து மனம் உருவாகியதோ அந்த எல்லையில்லாப் பெருவெளி வரை மனதை விரித்து பழுகுவதற்கானப் பயிற்சியினைத் அளித்துள்ளார். மகரிஷி அவர்கள்.

    2) இயற்கை விதி அறிதல்.

    மேலும் மனிதன் பெரும்பாலும் தவறுகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறான். அவன் செய்யும் தவறுகள் சொல் மற்றும் செயல் வடிவில் இல்லையாயினும் அது எண்ண வடிவில் இருந்து கொண்டுதான் உள்ளது. தவறுகள் எண்ண வடிவில் இருந்தாலும் அதற்கும் விளைவுகள் உண்டு. அதனால்தான் மனதை சரி செய்யக்கூடிய, செம்மைப்படுத்தக் கூடிய கலையை உருவாக்கி அதற்கு மன+வளக்கலை எனப் பெயரிட்டுள்ளார். இத்துடன் இல்லாமல் அதனை ஒரு அளவு கோலால் சரிபார்த்துக் கொள்ளச் செய்துள்ளார். அதுதான் அறிவிற்கான மூன்றாவது வளர் நிலை. அதனை சத்சங்க நிகழ்வுப்படி ஞாயிறன்று சத்சங்கத்தில் சிந்திப்போம். வாழ்க வளமுடன்.

                              வாழ்க மனித அறிவு                                                             வளர்க மனித அறிவு

    Loading

  • அயரா விழிப்புணர்வு-2/?

    வாழ்க மனித அறிவு                                                                         வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு-2/?

    FFC – 35

    07-12-2014-ஞாயிறு

    (Constant Awareness)

    இப்போது திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஆறாவது குறளாக மொழிந்துள்ளதைக் கவனத்திற்குக் கொண்டு வருவோம். இக்குறள் அனைவருக்குமே தெரிந்ததுதான். பள்ளியில் படித்திருப்போம். ஆனால் இன்று இக்குறளின் உட்பொருளை உணர்வோம்.

    ”பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ்வார்.”

    புலன்களைப் பொறி – வாயில் என்கிறார். அவர் புலன்களைக் கருவிகள் என்று கூறவில்லை. பொறிகளை (புலன்களை) அகப்படுத்தும்(trap) கருவியாகத்தான் கருதுகிறார். பொறி என்று மட்டும் கூறவில்லை. பொறி+வாயில்= பொறிவாயில் என்கிறார். (எலிப்பொறி வைத்து எலி பிடிக்கப்படுகின்றது. சிறிய மசால் வடைத் துண்டிற்கு ஆசைப்பட்டு எலி உயிரையே இழக்கின்றது.) ஐம்பொறியினுடைய வாயில் சிக்காமல் ஒழுக்க நெறி நின்றவர் நீடு வாழ்வார் என்கிறார்.

    இக்குறளை கடவுள் வாழ்த்து என்கின்ற அதிகாரத்தில் வைத்துள்ளதன் பொருளை அறிய வேண்டும். இறையுணர்விற்கும் புலன்வழி வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளது. புலன்கள் மனிதனின் ஆசைகளை அனுபவிக்கும் கருவிகள்தான். ஆனால் மனி்த சமுதாயம், இன்பம் அனுபவிப்பது புலன்கள் வழியாக மட்டுமேதான் முடியும் எனக் கருதுகின்றது.  தனது புலன் வழி ஆசையிலேயே மனிதன் மூழ்கி இருந்தால் அவனுக்கு புலன் இல்லாமல் அனுபவிக்கக் கூடிய இறைமீது எவ்வாறு ஆசை தோன்றும்? ஆகவேதான் இறைக்கும் நமக்கும் உள்ள தூரம் நாம் கொண்டிருக்கும் ஆசைகளே எனப்படுகின்றது. புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் புலனின்பம். இதில் சலிப்பும், துன்பமும் ஏற்படலாம். அளவு மீறும்போதும். முறை மாறும்போதும் இன்பமே துன்பமாகிவிடும். ஆனால் புலன் கருவிகள் இல்லாமல் உணரும் இன்பம் ஒன்று இருக்கின்றது, அதுதான் பேரின்பமாகும். இதில் சலிப்பும் இராது. துன்பமும் வராது. தெய்வீகப் போதைதான் வரும்.

    அயரா விழிப்புணர்வு வேண்டும் என்றால் என்ன பொருள்? உறங்கும்போது உணர்வு கிடையாது. விழித்திருக்கும் போது உணர்வு உண்டு. ஏற்கனவே உணர்வு இருக்கும் விழிப்பு நிலைக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றால் என்ன பொருள்? அதுவும் அயரா விழிப்புணர்வு வேண்டும் எனப்படுகின்றது. விழிப்பில் இருக்கும் போது உணர்வு இருக்கின்றது என்பது சரிதான். புலன்கள் வழியாக அறிவு உணர்ந்து கொண்டிருக்கின்றது. விழித்துக் கொண்டிருக்கின்ற போது மனிதன் எண்ணம், சொல், செயல் ஆகிய முத்தொழில்களைச் செய்கிறான். அப்போது மனிதன் விழிப்புடன் இருக்க வேண்டும். அதனைத்தான் நாம் அயரா விழிப்புணர்வு” என்கின்ற தலைப்பில் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

    மனிதனுக்கு எப்போதும் இன்பம் வேண்டுமென்றால் அவன் செயல்கள் எப்போதுமே நல்லவையாக இருக்க வேண்டும். எனவே எண்ணம். சொல், செயல் ஆகிய முத்தொழில்களைச் செய்யும் போது கவனம் வேண்டும். எதில் கவனம் வேண்டும்? செய்யும் செயல்களுக்கான விளைவு அறிந்து செயல் புரிவதில் கவனம் இருக்க வேண்டும். இந்த கவனமே விழிப்புடன் இருத்தலாகும். விளைவறிந்த விழிப்பு நிலை என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    அயரா விழிப்புணர்வு தேவை என்கின்ற அறவுரையான அறிவுரை ஏன் தோன்றியது? காரணம் என்ன? இதுவரை மனிதன் அயரா விழிப்புணா்வில் வாழவில்லை எனத் தெரிகின்றது.

    குருவை அடைவதற்கு முன்னர் ”அயரா விழிப்புணர்வு” என்கின்றச் சொற்றொடர் கேள்விப்படவில்லை. இப்போது இச்சொற்றொடர் அறியப்படுகின்றது. இச்சொற்றொடரில் உள்ள அறமான அறிவுரையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    பேரறிவே பின்னப்பட்டு (fractionated consciousness) ஒரறிவு உயரினங்களிலிருந்து ஐயறிவு வரை பயணித்துவிட்டு கடைசியாக மனித அறிவாக வந்துள்ளது. பேரறிவிற்கு ஆதிநிலையில் உணர்வு இல்லை. ஆதிநிலையில், அதாவது இயங்காநிலையில் பேரறிவிற்கு உணர்வதற்கு அங்கு ஏதும் நிகழ்ச்சி இல்லை. ஆனால் பின்னப்பட்டு பஞ்சபூதங்களாகி, உயிரினங்களாகியபோது அதற்கு உணர்வு வந்து விட்டது. ஐயறிவு வரை பிரபஞ்ச நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒலி. ஒளி, சுவை, மணம் ஆகியவைகளை படிப்படியாக உணர்ந்து வந்தது. அதாவது இருந்ததை உணர்ந்தது. அதுதான் ஐந்தறிவு வரையுள்ள திறன்.

    தன்மாற்றத்தில், பின்னப்பட்ட பேரறிவு, ஆறாம் அறிவாக வந்தபோது அது ஏற்கனவே உணர்ந்த ஐந்து உணர்வுகளைத் தவிர வேறு பிரபஞ்ச நிகழ்ச்சிகள் உணர்வதற்கென்று இல்லை. ஆகவேதான் பேரறிவு ஆறாம் அறிவாக மலரும்போது ஆறாம் அறிவிற்கெனத் தனியாக புலனை ஏதும் உருவாக்கிக் கொள்ளவில்லை. ஆறாம் அறிவாக வந்த போது புலன்கள் ஏதும் உருவாகாத நிலையில் ஆறாம் அறிவின் பணி சிந்திக்க வேண்டும். சிந்தித்திருக்க வேண்டும்.

    அதில் தவறிவிட்டது. இயற்கையில் தவறு ஏற்பட்டது என்று நாம் யார் சொல்வதற்கு? தவறில்லை. தாய் தன்குழந்தையை ஒரு வயதில் விளையாட்டுப் பள்ளிக்கு(play school) அனுப்ப முடியுமா? ஒன்றாம் வகுப்பில் சோ்வதற்கு ஐந்து வயது ஆகியிருக்க வேண்டுமல்லவா? அதுபோல்தான் இயற்கையும் நினைத்த மாத்திரத்தில் ஏதும் செய்துவிட முடியாது. மனிதன் யார்? இயற்கை யார்? இருவருமே வேறு வேறுகிடையாது. இயற்கை அன்னையின் குழந்தைகள்தான் மனிதன். மனிதன் அந்த பரிபக்குவத்திற்கு வரவேண்டுமே.! வந்தால்தானே அதற்கான கனிந்த நேரம் வரும். இப்போது வந்துள்ளது.

    அதனால்தான் ஆதங்கப்பட்டு இப்போது அந்த பின்னப்பட்ட பேரறிவுச் சொல்கின்றது” சிந்திக்க வேண்டும். சிந்திருக்க வேண்டும்” என்று. இங்கே இயற்கையியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் இயற்கையின் நிகழ்வை ”When fraction demands Totality Supplies” என்கின்ற உண்மையைச் சிந்தித்து நாமும் அவ்வுண்மை மக்களிடம் பரவ வலுசேர்ப்போம். இவ்வாறாக ஆதங்கப்பட்டு மனிதன் எண்ணினால்தான் ”எண்ணமே பரிணாமத்தின் வாகனம்” ஆக உள்ளதால் பரிணாமம் உய்ந்து வரும். அவ்வாறு இருக்கும் போது அறிவு, ”நிகழ்ச்சிகளை உணரும் நான் யார்?” என வினா எழுந்து, தன்னை அறிவதைத் தவிர வேறு பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. நிகழ்ச்சிகளையெல்லாம் உணரும் “நான் யார்?’” என உணர்வதற்கு விரும்பும் நிலைக்கு இந்நேரம் வந்திருக்க வேண்டும். பரிணாமத்தில் இப்போதுதான் மனவளக்கலை வழியாக அந்த தருணத்தை உருவாக்கியுள்ளது இயற்கை.

    இங்கே மற்றொரு  உண்மையினை கூடவே அறிந்து கொள்ள வேண்டும்.   தன்னை உணர்வதற்குப் புலன்கள் தேவையில்லை.  இது சரிதானே?  அப்படியானால் கடவுளை உணர்வதற்குப் புலன்கள் அவசியமில்லை என்றாகின்றதல்லவா?  இதுவும் சரிதானே? தன்னை உணர்ந்தால் கடவுளை உணரலாம். ஆகவே கடந்து உள்ளே சென்றால் கடவுளை உணரமுடியும் என்பதால்தான் உணரப்படுகின்ற அந்த ஒன்றிற்கு கட+உள்= கடவுள் எனப்பெயரிட்டான் மனிதன்.  அரூபமான கடவுளை உணர்வதற்கு அரூப வழிபாட்டின் மூலமாகத்தான் சாத்தியம் என்றாகின்றதல்லவா?  இதுவரை பரவலாக இல்லாத அரூப வழிபாட்டினைத்தான் மனவளக்கலை ஏற்படுத்தி வருகின்றது.     புதனன்று தொடா்வோம்.

    வாழ்க வளமுடன். வாழ்க மனித அறிவு. வளா்க மனித அறிவு.
           வாழ்க அறிவுச் செல்வம்.   வளா்க அறிவுச் செல்வம்.

    Loading