இன்றைய விருந்து

  • அறிவிப்பு

    வாழ்க மனித அறிவு                                     வளர்க மனித அறிவு

    05-12-2014

    வாழ்க வளமுடன்,

    தவிர்க்க முடியாத காரணங்களைக் கருதி இணையதள சத்சங்கத்தில் சந்திப்பதில் (Meeting in Web Satsang) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
    1) வாரத்தில் ஒரு நாள் விடுமுறை. அது செய்வாய்க் கிழமையாக இருக்கட்டும்.

     

    2) அறிவிற்கு விருந்திற்காக ஞாயிறு மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் சந்திப்போம்.

     

    3) சிந்தித்தல் பயிற்சிகளில் ஒன்றான சிந்திக்க வினாவிற்காக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் சந்திப்போம்.

    4) சிந்தித்தல் பயிற்சிகளில் மற்றொன்றான சிந்திக்க அமுத மொழி பகுதியில்; வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களில் சந்திப்போம்.

    இந்த தற்காலிக ஏற்பாடு நாளை முதல்(06-12-2014) அமலுக்கு வருகிறது.

    வாழ்க Prosper Spiritually இணையதள சத்சங்கம்.
    வளர்க Prosper Spiritually இணையதள சத்சங்கம்.
    வாழ்க இணையதள பார்வையாளர்கள்
    வளர்க இணையதள பார்வையாளர்கள்

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • அயரா விழிப்புணர்வு-1 / 2

    வாழ்க மனித அறிவு                                                                               வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு-1 / 2

    FFC  – 34

     05-12-2014

    (Constant Awareness)

             இன்று அயரா விழிப்புணர்வு பற்றி சிந்திக்க இருக்கின்றோம்.  அயரா விழிப்புணர்வு ஆங்கிலத்தில் ”Constant awareness“ எனப்படும்.  அயரா விழிப்புணர்வு என்றால் என்ன?    அயரா, விழிப்பு, உணர்வு ஆகிய மூன்று சொற்களைக் கொண்டிருக்கின்றது “அயரா விழிப்புணர்வு“ என்கின்ற சொற்றொடா்.
            யாருக்கு அயரா விழிப்புணர்வு தேவை?  அறிவிற்கு அயரா விழிப்புணர்வு தேவை.  ஏன் தேவை?  மனித அறிவு இன்பத்தையே எப்போதும் விரும்புகின்றது.  இதில் தவறில்லை.  ஏன் அறிவு துன்பப்படவேண்டும்? அறிவு  எப்போதும் இன்பத்தையே விரும்புவதால்,  அறிவிற்கு எப்போதும் விழிப்புணர்வு தேவை.  எப்போதும் தேவையாக இருக்கின்ற விழிப்புணர்வைத்தான்  ”அயரா விழிப்புணர்வு” என்கிறோம்.. அயரா விழிப்புணர்வு எவ்வாறு  எப்போதும் இன்பத்தைத் தரும் என்று  இன்று சிந்திக்க உள்ளோம்.
          முதலில் ஒரு சிறு உதாரணத்தின் மூலம் அயரா விழிப்புணர்வின் பயனை இப்போதே புரிந்து  கொண்டுவிட்டு விரிவாக சிந்திப்பதற்கு நம் சிந்தனையைத் தொடர்வோம். ஐநூறு கிலோ மீட்டர் கடப்பதற்காகும் பத்து மணிநேரமும் தூங்காமல் விழித்துக்கொண்டுதான் மகிழுந்தை (Car) ஒட்ட வேண்டும். சேர வேண்டிய இடத்தை நெருங்கும் கடைசி இரண்டு  நிமிடங்களில்,  ஒரு சில நொடிகள்  அயர்ந்து விட்டால் கூட விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.  ஒரு சிலர் விபத்தைச் சந்திக்கின்றனர்.
         ஆகவே ஒன்பது மணி, ஐம்பத்தெட்டு நிமிடங்கள் விழிப்புடன் இருந்து விட்டு கடைசி இரண்டு நிமிடங்களில் ஒரு சில வினாடி விழிப்புநிலைத் தவறியதால் அதற்குரிய விளைவு வருகின்றது.  ஆகவேதான் பத்து மணிநேரமும் விழிப்புடன் உறங்காமல் மகிழுந்தை ஓட்டியிருக்க வேண்டும் ஓட்டுனா்.  இதுதான் அந்தப் பணியில் ஒட்டுனருக்கு இருக்க வேண்டிய அயரா விழிப்புணர்வாகும்.(அதோடு மட்டுமில்லை வாழ்விலும் அயரா விழிப்புணர்வு தேவை அவருக்கு)  விழிப்புணர்வு அயர்ந்ததால் விபத்து நேரிட்டது.  இதுபோல் உயிர் உடலில் இருக்கின்ற வரை, வாழ்க்கை என்கின்ற பேரின்ப உந்தை இங்கே ஒட்ட வேண்டியிருப்பதால் வாழ்க்கையில், யாராக இருந்தாலும்,  உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் அயரா விழிப்புணர்வு அவசியமாகின்றது.
       விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவ்வாறு அயா்ந்து விட்ட எல்லா ஓட்டுனர்களும் விபத்தைச் சந்திப்பதில்லை.  ஒரு சில சமயங்களில் ஒரு சிலருக்கு விபத்து நடக்கின்றது.  இங்கே தான் தீயவினைப்பதிவுகளின் விளைவுகளை வெளிக் கொண்டு வர உகந்த நேரமாக செயல்விளைவு நீதி முடிவு செய்துவிட்டது என்றும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஒட்டுனரின் செயலான  அயர்ந்து விட்டமையின்   விளைவு உடனே வந்து விட்டதாகவும் கருதலாம்.  இதில் எது சரி என ஆராயப்போனால் இன்றைய சிந்தனைக்கான தலைப்பை விட்டு வெளியே செல்வதாகிவிடும்.  ஆகவே இதே உதாரணத்தை வேறொரு சமயத்தில் வேறொரு தலைப்பில் சிந்திக்கலாம்.  தலைப்பிற்குள் செல்வோம்.
        “அயர்ந்து” என்றால் “தன்னை மறந்து” என்று பொருள். பிரயாணக் களைப்பால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறோம்.  என்ன அர்த்தம்? தன்னை மறந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.  “அயரா“ என்றால் “தன்னை மறவாத நிலை“ என்று பொருளாகின்றது.  அறிவிற்கு வேண்டிய ”தன்னை மறவாத நிலையை” அயரா விழிப்புணர்வு என்கிறோம்.
        “விழி” என்றால் “சுய உணர்வுடன் இருத்தல்” என்று பொருள்.  அறிவு விழித்திருத்தல் என்றால் அது தன்னுடை சுய உணர்வுடன் இருத்தலாகும்.  “சுய உணர்வு” என்றால் தன்னுடைய நிலை, செயல், சூழல் முதலியவற்றை அறியும் கட்டுப்பாட்டு உணர்வு என்று பொருள்.  “விழிப்பு” என்றால் மயக்கம் நீங்கிய நிலை என்று பொருள்.  அதாவது விழிப்பு நிலை என்றால் மயக்கம் நீங்கி சுய உணர்வுடன் இருத்தல் என்பதாகின்றது.
        ‘உணர்வு’ என்றால் ஒன்றை அனுமதிக்கிற, விரும்புகிற, வேண்டுகிற மனநிலை என்று பொருள்.
    ‘அயரா விழிப்புணர்வு’  என்றால் மயக்கம் நீங்கி தன்னுடைய நிலையை மறவாது விரும்புகிற நிலை என்று பொருளாகின்றது.  இந்நிலை மனிதஅறிவிற்கு  அவசியமாகின்றது. ஏன் அவசியமாகின்றது?  எப்போது மனிதனுக்கு ஒன்று அவசியமாக இருக்கும்?  எந்த ஒன்று, மனிதன் சிக்கலற்று, துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வதற்கு தேவையாக இருக்கின்றதோ அந்த ஒன்று மனிதனுக்கு அவசியமாகின்றது.
         மயக்கம் நீங்கி தன்னுடைய நிலையை மறவாது விரும்புகிற நிலை அவசியமாகின்றது என்றால், மனிதஅறிவு தன்னுடைய மூலநிலையை (source, origin), மறந்து மயக்கத்தில் உள்ளது என்று பொருள்.  ஐயறிவு சீவனுக்கு இந்த நிலை தேவையில்லை. ஏனெனில் ஐயறிவு சீவன்கள் ஒவ்வொரு புலனும் உணர வேண்டிய உணர்வை உணர்ந்து கொண்டு நிறைவு பெற்றுக் கொண்டுதான் உள்ளன.  ஆறாம் அறிவுள்ள மனிதன் ஐயறிவு சீவன்கள் உணா்ந்து வந்த அதே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியன மட்டும் உணர்வதைத் தவிர ஆறாம் அறிவிற்கான பிரத்யேக உணர்வினை பெறாமல் இருக்கிறான். 
       ஆகவே மனிதனுக்கு நிறைவு ஏற்படாமல் புலன் வழி வாழ்க்கையிலேயே மூழ்கி அதனையே பிரதானமாக நினைக்கிறான்.  மனம் நிறைவு பெறாத போது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று, என்றும் அழியாப் பொருளின் மீது மனம் திரும்பாமல், அழியும் பொருட்களின் மீது மோகம் கொள்கிறான்.  விளைவு, அளவும் மீறியும், முறை மாறியும் அனுபவித்து இயற்கை நீதியான இன்பமே துன்பமாக மாறும் என்பதனை அறியாமல் மயக்கத்தில் வாழ்கிறான்.  இதனையே மெய்ஞானிகள் புலன்மயக்கம் என்கின்றனா். புலன்கள் உணரும் கருவிகளாகவே மட்டும், இருக்க வேண்டுமே ஒழிய புலன்களை மனதைச் சிறைப்படுத்தும் பொறிகளாக(trap) ஆக்கி விடக்கூடாது மனிதன்.  அப்படி ஆகிவிட்டால் அந்தப் புலனுக்கு அடிமை ஆகிவிடுகின்றது அறிவு.  இதுதான் பழக்கம் எனப்படுகின்றது.  இறைக்கு அடியராக இருப்பதைத்தவிர, பெரும்பாலும் புலன்களுக்கு அடிமையாகின்ற பழக்கம் தீய பழக்கங்களாகவே இருக்கும். ராஜ வாழ்க்கை வாழ வேண்டிய அறிவு அடிமை வாழ்க்கை வாழ்கின்றது.  திருவள்ளுவரின் குறட்பாவுடன் ஞாயிறன்று சந்திப்போம்.
    …………ஞாயிறன்றுத் தொடர்வோம்
     

    Loading

  • இறை அருள் பெற…….5 / 5

    வாழ்க மனித அறிவு                                                                               வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற…….5 / 5

    FFC  – 33

     04-12-2014

        எண்ணம் இயற்கையின் / இறையின் சிகரமாக இருப்பதால் பரிணாமக் கசடுகளை நீக்கிய நிலையில், ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்ட எண்ணமும்,  அதற்கேற்ற செயல்களும், இறை அருளைப் பெற்றுத் தரும் என்று நேற்று பார்த்தோம்.  இறை அருள் காப்பையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், நிறைவையும் அளிக்கும் என்றும் பார்த்தோம்.  இதன் பயனை அனுபவித்து இன்புறுவீர்களாக என பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் உறுதி அளிப்பதையும் அறிந்து மகிழ்வுற்றோம்.   இன்றும் அச்சிந்தனையைத் தொடர்வோம்.

       இறையருள் ஐந்தறிவு சீவன்களுக்குத் தேவையில்லை. ஐந்தறிவு சீவன்களுக்கு  இறையருளை வேண்டவும் தெரியாது.  ஆறாம் அறிவுள்ள மனிதனுக்குத்தான் இறையருள் வேண்டியிருக்கின்றது.  ஏனெனில் ஐந்தறிவு வரை இயற்கையே / இறையே அவ்வுயிர்களில் வழி நடத்திக் கொண்டிருக்கின்றது.  ஐந்தறிவு சீவன்கள் தோன்றியதிலிருந்து இன்று வரை, அதாவது பல லட்சம் ஆண்டுகளாக ஒரே மாதிரியாக, இயற்கை வைத்துள்ள வழியில் வாழ்ந்து வருகின்றன.

       ஆனால் மனிதன் வாழ்கின்ற நிலை அவ்வாறு இல்லை.  இயற்கை வைத்துள்ள வழியில் மனிதன் வாழ்வதில்லை. ஆதி மனிதனிலிருந்து இன்று வரை வாழும் நெறிகள் மாறியுள்ளன.  பல நெறிகளில் வாழ்கிறான்.  அறநெறி மனித குலத்திற்கு மிக மிக அவசியம். மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு மனிதனுக்கு காப்பு, வெற்றி, மகிழ்ச்சி, நிறைவு ஆகியவைகள் அவசியமாகின்றன.  இவையெல்லாம் மனிதனின் அறச்செயல்களுக்கு இயற்கை / இறை விளைவாகக் கொடுக்கும் அருட்பரிசுகளேயாகும்.

      இறையே மனித அறிவாக இருந்தாலும் அதனுடன் பரிணாமக் கசடான விலங்கினப் பண்பும் சேர்ந்து விட்டதால் அது நீங்காத வரையில் மனிதன் என்கின்ற உருவினேலே விலங்காகத்தான் உலவி வருகிறான்.  இதனை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவா்களின் கவியின் மூலம் அறியலாம்.

                                                முழு மனிதன்(03-01-1959)

                         மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு,

                                மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு,

                          மனமறிந்து மனஇதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்

                                  மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழுமனிதன்.   …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

      விலங்கினப் பண்பை நீக்கி மனிதனாகி, ஐயப்படாது அகத்தை உணர்ந்து, தெய்வமாவதற்குத்தான் ஆன்மா பிறவி எடுக்கின்றது.   அது வரை மனிதன் குறையுடைய  மனிதனாகத்தான் இருக்கின்றான்.

         குறையுடைய மனிதனிடமும் இறை இருந்தாலும், அவனிடம் உள்ள குறைகள், தெய்வீகத்தை மலரச்செய்யாது,  அன்பையும், கருணையையும் வெளிப்படுத்த விடாது.

    ஆகவே தெய்வீகத்தையே வெளிப்படுத்தாத குறையுடைய மனிதன்  எவ்வாறு இறை அருளைப்  பெறமுடியும்?

    1)    குறையுடைய மனிதன் எவ்வாறு ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்ட அறவுணர்வில் வாழ முடியும்?

     2)    ஆகவே அறவுணா்வில் வாழாதவனிடம் புண்ணியமான ஒழுக்கம் இருக்காது.  கடமை இருக்காது.  கடமைக்கும்  கடவுளுக்கும்  தொடர்பு இருப்பதால், கடமையைச் செய்யாதவனிடம் எவ்வாறு இறைத் தொடர்பு இருக்கும்?

    ”கடவுளை உணர்ந்தோர் கடவுளை நாடுவார்

    கடவுளை அறிந்தோர் கடமையில் வாழுவார்” என்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய இயற்கை உண்மை இருக்கும் போது, இறைத் தொடர்பை மறந்தவனுக்கு  எவ்வாறு இறையருள் கிட்டும்?

     3)    அடுத்ததாக ஈகை இருக்காது, ஈகையில்லாதவனிடம் அடுத்த உயிர்களிடம் காட்ட வேண்டிய இரக்கம் இருக்காது.

    ”ஈதல் இசைபட வாழ்தல்; அது அல்லது

    ஊதியமில்லை உயிர்க்கு”    ….. என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் மொழிந்திருக்கும் போது ஈகை இல்லாதவனுக்கு எவ்வாறு இறையருள் கிட்டும்.?

           இந்த மிகவும் கவலைக்கிடமான மனித நிலையினைக் கருத்தில் கொண்டு மனித சமுதாயத்தை மீட்டெடுக்கத்தான் இயற்கை/இறை தன்னுடைய தன்மாற்ற நிகழ்ச்சியில் உரிய நேரத்தில்   14-08-1911 அன்று,   இதுவரை மனம் வாக்கினில் தட்டாது இருந்து வந்த பிரம்மத்தை தெளிவாக்கிய இக்காலப் பிரம்ம ரிஷியை குழந்தையாக மனித சமுதாயத்திற்கு அருட்பரிசாகக் கொடுத்தது.

           பிறகு இயற்கை அன்னை, மகானாக்கும் நான்கு உன்னதமான வினாக்களை, அத்தெய்வீகச் சிறுவனிடம் பன்னிரண்டு வயதினிலேயே எழுப்பியது.  அதனைத் தொடர்ந்து இளைஞரான போது. திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், இராமலிங்கர் ஆகியவர்களை அந்த இளைஞருக்கு மானசீகக் குருமார்களாக்கியது.  மேலும் பேரறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து மகான்களின் அறிவாற்றலையும் உறுதுணையாக்கியது.

        கடவுள் நம்பிக்கை இருந்தாலும், அப்படியே ஏற்றுக் கொண்டு இறைவழிபாடு மட்டுமே செய்து விடாமல் கடவுள் என்பவர் யார், மற்றும் அவர் ஏன் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்கின்ற வினாவினை எழுப்பி அதற்கானத் தெளிவான விடைகளைத் தந்தது.  பிறகு அம்மாமனிதரை உலக நலத்தொண்டராக்கியது. உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவிக் கொடுத்தது;  இவ்வுலகத்தை உய்விக்க அருட்தந்தையாக்கியது.  உலக அமைதிக்கான விதையினை ஊன்றிவிட்டது.  அந்த வித்து முளைத்து வளர்ந்து “மா மரமாகி“ அமைதிக் கனிகளைக் கொடுப்பதற்கு  அம்மரத்திற்கு உரம், நீர் ஆகியவைகளை அளிப்பதற்கு மனவளக்கலைஞர்களை உருவாக்கி வருகின்றது.

     அவர் உயர்ந்த நிலைக்கு உலக மக்கள் அனைவரையும் உயர்த்த  மனவளக்கலையை அருட்கொடையாகக் கொடுத்துள்ளது.  மனவளக் கலைஞா்கள் இறையருளைப் பெற்று, அவா்களையே அருளைக் கொண்ட நிதியுடையவர்களாக்கி, அருள்நிதியர்களாக்கி மகிழ்கின்றது இயற்கை.  இறையருளைப் பெறுவதற்கான வழிகளை மனவளக்கலையில் அறிவுறுத்தியுள்ளது.  ஐந்து வளங்களான உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஆகியவற்றை அளிக்கும் பயிற்சியினை அளித்து, அதனை இப்போது பள்ளியிலிருந்து பல்கலைக் கழகங்கள் வரை பாடமாக்கி கொண்டு சென்றுள்ளது இயற்கை.

        சுருங்கச் சொல்லின், பல பிறவிகளாகக் கருமையத் தொடர்புகளாக விலங்கினப் பண்பைக் கொண்ட மனித குலத்தை உய்விக்க வல்ல மனவளக்கலை, மனவிரிவு பெறுதல், இயற்கை விதி அறிதல், எண்ணம், சொல், செயலில் விழிப்புடன் இருத்தல் ஆகிய மூன்று வளர் நிலைகளைத் தந்து நுண்மாண நுழை புலன், ஏற்புத் திறன், தக அமைதல், பெருந்தன்மை, ஆக்கத்திறன் ஆகிய ஐந்து பேறுகளை மனவளக்கலைஞர்களுக்கு இயற்கை அளித்து வருகின்றது என்பது இயற்கையின் / இறையின் அருளால் தானே நடக்கின்றது?

        இசைவு, நிறைவு, மகிழ்வு, மெய்யறிவு, அமைதி ஆகிய ஐம்பெரும் பயன்களையும் அருளுகின்றதே.  இது இயற்கையின் அல்லது இறையின் கொடைதானே.  இதுதானே இயற்கையின் / இறையின் அருள்?  நாம் இந்த விருந்தினை அருந்தி முடிக்கும் நிலைக்கு வந்து விட்டோம். பிரம்மத்தை காண்பித்த  பிரம்ம ரிஷி அவர்கள் வாயிலாக இந்த மனித குலத்திற்கு அளித்துள்ள பாடலுடன் இன்றைய விருந்தினை முடித்துக் கொள்வோம்.

                                             வினைப்பதிவுகள்  தூய்மை

                                  பல ஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப்

                                            பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்.

                                    நலமடைந்து மனிதனாகி தெய்வமாக உயரலாம்

                                              நல்வாய்ப்பு ஆற்றலிவை கருணையோடு இறைநிலை

                                    நில உலக மனிதருக்கு அளித்துளது இயல்பென

                                              நெடுங்காலத் தொடர்புடைய கருமையத் தூய்மையால்

                                   பலனடைய அகத்தாய்வும் அகத்தவமும் இறையுணர்

                                           பாதையிலே விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி.   ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     ஒரறிவிலிருந்து ஐந்தறிவு விலங்கினமாக வந்த பிறகுதான் இறை மனிதனிடம் அறிவாக தன்மாற்றம் அடைந்துள்ளது.  அவ்வாறு  வரும்போது இரண்டறிவு உயிரினங்களிருந்து  ஐயறிவு உயிரினங்கள் வரை, கருமையத் தொடர்பாக வந்த விலங்கினப் பண்பான பிறர் வளம் பறித்துண்ணல் கசடாக சேர்ந்து விட்டது மனித அறிவுடன்.  ஆதி மனிதனின் opening balance  விலங்கினப் பண்புதான்.  மனிதனிடம் உள்ள பின்னப்பட்ட பேரறிவு தன்னை அறிய வந்த நோக்கத்தை மறந்து விட்டது.

       பரிணாமக் கசடுகளை நீக்காமல் இருந்ததால்,  அது வேறு பல தீய பண்புகளை ஏற்படுத்தி விட்டது.  ஆகவே மனித அறிவிடம் தீய பண்புகளான தன்முனைப்பு . தான், தனது என்கின்ற எண்ணக் கோடுகள். பேராசை, சினம், கடும் பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை வஞ்சம் ஆகியவை வந்து சேர்ந்துவிட்டன.  பஞ்சமகா பாதகங்களான பொய், களவு, கொலை, சூது, கற்பழிப்பு ஆகியவை உருவாகிவிட்டன. இந்த நிலையுடைய மனிதன் இறையிடமிருந்து எவ்வாறு அருளை எதிர் பார்க்க முடியும்?

       பிறவியின் நோக்கம் மறந்ததால், மகான்களைத் தவிர மற்றவர்கள், அதற்கான முயற்சியை எடுக்காமையால் மனித மனங்கள் நிறைவு பெறமுடியவில்லை.  மனித மனங்கள்  நிறைவு பெறாததால், மீண்டும் பொருள், புகழ், செல்வாக்கு. புலனின்பம் ஆகியவற்றில் புகுந்து அழிந்து மனதை புண்ணாகிக் கொள்கிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார் அருட்தந்தை அவர்கள்.  இந்தச் சூழலில் இயற்கை/இறை அருளியதுதான் மனித மாண்பில் ஏற்றம் தரும்  மனவளக்கலை.  மனவளக்கலையைத் தவிர வேறு என்ன அருள் வேண்டும் இயற்கையிடமிருந்தோ அல்லது இறையிடமிருந்தோ மனிதனுக்கு?

                                                                 வாழ்க வேதாத்திரியம்.  வளர்க வேதாத்திரியம்.

                                                              வாழ்க அருள் நிதியர்கள்.  வளா்க அருள்நிதியர்கள்.

    வாழ்க உலக அமைதி. வருக விரைவில் உலக அமைதி.

    இறை அருள் எல்லா மனித உள்ளங்களிலும் மலரட்டும்.

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

     

          முற்றும்

    நாளைச் சந்திப்போம்.

    Loading

  • இறை அருள் பெற…….4 / ?  

    வாழ்க மனித அறிவு                                                                               வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற…….4 / ? 

    FFC  – 32

     03-12-2014

        எண்ணமே இயற்கையின் சிகரம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.   எவ்வாறு எண்ணம் இயற்கையின் சிகரமாகும்?  இயற்கை வேறு, இறை வேறு அல்ல.  இறையின் மறு விஞ்ஞானப் பெயர்தான் இயற்கை.  எண்ணமே இயற்கையின் சிகரம் என்கின்ற போது எண்ணமே இறை என்றுதானே பொருள்.  எண்ணம் எவ்வாறு இயற்கையின் சிகரமாகும் என்கின்ற வினாவிற்கானப் பதிலைப் பார்ப்போம்.

        இயற்கையின் ஆரம்ப நிலை எது?  இயற்கையின் ஆரம்ப நிலை வெளி.  அந்த வெளியைத்தான் இறைவெளி என்கின்றனர் மெய்ஞானிகள். இறைவெளியின் நான்கு தரங்களாவன: வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்.  நான்கு தரங்களில் மூன்றாவதாக பேரறிவு இருந்தாலும் சுத்த அத்வைதிகள் அறிவே தெய்வம் என்கின்றனர்.  ஏன்? மீண்டும் வினா எழுந்துள்ளது.

       இறைவெளி வற்றாயிருப்பாகவும், பேராற்றலாகவும், இருந்தாலும், பேரறிவு மட்டும் அதற்கு இல்லையானால் அது ஒன்றுமில்லாததாகத்தான் இருந்திருக்க வேண்டும்.   இறை வெளி தன்னிருக்கத்தால், துகள்களாகி பஞ்ச பூதங்களாகி பின்னர் பலகோடி நட்சத்திரங்களாகி அதில் நாம் வாழும் பூமியைக் கொண்ட ஒரு சூரியக் குடும்பமும் உருவாகியிருக்க முடியாது.  அறிவு இல்லை என்றால் உயிரினங்களே தோன்றியிருக்க முடியாது?  எனவே பிரதானமாக உள்ளது அறிவுதான்.

        ஆயிரம் நபர்கள் பணிபுரியும்  தொழிற்சாலையில் அவர்களைக் கண்காணிக்க எத்தனை மேற்பார்வையாளர்கள் தேவையிருக்கின்றது?.  அத்துனை மேற்பார்வையாளர்களுடைய அறிவுதானே கண்காணிக்கின்றது.  அதுபோல் இத்துனைப் பெரிய பிரபஞ்சமாகி கோடானுகோடி உயிரினங்களாகி இறுதியில் மனித அறிவாக பரிணமிக்கின்றது என்றால் அதற்கு யார் காரணம்? இது மூன்றாவது வினாவாகிவிட்டது.  பேரறிவு தான் காரணம் என்பது விடை.

         அந்த பேரறிவுதான் இப்போது நீங்களுமாகி அடியேனுமாகி சிந்திக்கின்றது.   ஆகவே அறிவே இயற்கையின் ஆதிநிலையில், இறைவெளியில்   அறிவாக இருந்துள்ளது.  எண்ணம் என்பது என்ன?  எது எண்ணுகின்றது? அறிவின் பணிகள் என்னென்ன?  எண்ணுவது, உணர்வது, ஒழுங்கு படுத்துவது ஆகியவைகளாகும்.  ஆகவே எண்ணக்கூடிய அறிவை, இயற்கை,  கொண்டுள்ளதால் எண்ணம் என்பது இயற்கையின் சிகரமாகின்றது. மலையின் உச்சியைச் சிகரம் என்போம்.  சிகரம் என்கின்ற சொல்லிற்கு சிறப்பு, உன்னதம் என்றும் பொருளுண்டு.  ஆகவே எண்ணமே இயற்கையின் சிகரம் என்பது சரியே என்கின்ற முடிவிற்கு வருகிறோம்.  .இறையும்  இயற்கையும் ஒன்றே என்பதால் எண்ணம் இயற்கையின் சிகரமாக இருப்பது போன்று இறையின் சிகரமும் மனிதனிடம் உள்ள அறிவாகிய  இறையேதான் எண்ணுகின்றது என்று பொருளாகின்றது.

       இத்தகைய சிறப்பு வாய்ந்த மனிதன் ஏன் இறை அருள் பெறமுடியாமல் துன்பப்பட வேண்டியுள்ளது? மனிதன் எண்ணுகிறான் என்றால் அவனுள் இருக்கின்ற பின்னப்பட்ட(Fractioned) இறையே தான் எண்ணுகின்றது.  பின்னர் என்ன குறைவு மனிதனுக்கு?  சில சுத்த அத்வைதிகள்  பொருள். மெய்ப்பொருள்  என்றுப் பிரித்துக் கூறுவதுபோல்.  அறிவாகிய இறையையும்  மனித அறிவையும் வித்தியாசப்படுத்துவதற்காக கலங்கமிலாப் பேரறிவை சுத்த அறிவு என்கின்றனர்.  அப்படியானால் மனித அறிவு அசுத்தமாகிவிட்டது என்று பொருளாகின்றது.  அதாவது பின்னப்பட்ட சுத்த அறிவுடன்  கலங்கங்கள் சேர்ந்து விட்டன என்றாகின்றது.  பேரறிவு கலங்கமில்லாதது.  அது மனித அறிவாக வரும்போது அதனுடன் பரிணாமக் கசடுகளும் சோ்ந்து வந்துவிட்டன.  இங்கே இறை அருளைப் பற்றி  வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள வாசகம் இந்த இணைய தளத்தின் வாயில் பக்கத்தை(Homepage)  அலங்கரித்து இருந்தாலும் அதனை மீண்டும் இங்கே நினைவு படுத்திக் கொள்வோம்.

              ”நல்ல பயனுள்ள அறச் செயல்களும், அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம் இயங்குகின்றனவோ, அவரைச் சுற்றிலும், நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும். அனுபவத்தைக் கண்டு இன்புறுவீர்களாக.”  என்று இறைஅருள் பெறுவது பற்றி அருளியுள்ளார் ரிஷிகளில் பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  வெட்டவெளியாகியப் பிரம்மத்தை வெளிச்சமாக்கி விட்டார் பிரம்ம ரிஷி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

       இக்காலப் பிரம்ம ரிஷியின் அருட் கூற்றைக் கூர்ந்து நோக்குவோம்.  யாருக்கு இறையருள் கிடைக்கும் என்கின்ற வினாவை எழுப்பிச் சிந்திப்போம்.

          அறச்செயல்கள் இருக்க வேண்டும்.    அறச் செயல்கள் நல்ல பயனுள்ளதாக இருக்க வேண்டும் என மிகக் கவனமாகக் கூறுகிறார்  இக்காலப் பிரம்ம ரிஷி.  அறம் என்றாலே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றையும் கொண்டதுதான் அறம் என்பது இக்காலப் பிரம்ம ரிஷியின் அறத்திற்கான வரையறை.  அப்படி இருக்கும்போது அறம் என்பது நல்ல பயனுள்ளதைத்தானேக் கொடுக்கும்!  இருப்பினும் நல்ல பயனுள்ள அறச்செயல்கள் இருக்க வேண்டும் என்கிறார் இக்காலப் பிரம்ம ரிஷி அவர்கள்.

        இரண்டாவதாக அதற்கேற்ற எண்ணங்கள் இருக்க வேண்டும் என்கிறார் இக்காலப் பிரம்ம ரிஷி அவா்கள்.  எண்ணம்தான் எல்லா செயல்களுக்கும் வித்து.  எனவே நல்லபயனுள்ள அறச்செயல்களும் அதற்கேற்ற எண்ணங்கள் எண்ணுபவரைச் சுற்றிலும்நுண்ணலையாகிய அருட்பேராற்றலும்சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் என்கிறார். அருட் பேராற்றல்  என்று சொல்லியிருக்கலாம்.  ஆனால் ”லும்” என்று சேர்த்து அருட்பேராற்றலும் என்று கூறுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.  இது இறை அருளில்லையா?  இத்தகைய தன்மையுடைய அருளைத் தவிர வேறு என்ன இறைஅருள் வேண்டும் மனிதனுக்கு?  என்னவெல்லாம் தருகின்றது  இக்காலப் பிரம்ம ரிஷி கூறும் இறையருள்.

      முதலில் காப்பளிக்கிறது நுண்ணலையாகிய அருட்பேராற்றல்.  தோன்றாத்துணையாகவும் இருக்கலாம் ஒரு சிலருக்கு.  வேறு சிலருக்கு அது கேளா ஒலி போல் தோன்றியத் துணையாகவும் இருக்கலாம்.

      அடுத்ததாக  வெற்றியளிக்கிறது.

      அடுத்ததாக மகிழ்ச்சியளிக்கின்றது.

      அதற்கும் அடுத்ததாக நிறைவை அளிக்கின்றது.

      அதற்கும் மேலாக இந்த அனுபவத்தால் இன்புறச் செய்கின்றது.

        வேறு என்ன வேண்டும்  இறை அருளினால்?  மனிதப் பிறவியின் பயன் இறையுணர்வு பெருதலாயிற்றே.  அதனை இந்த இறை அருள் தரவில்லையே என ஐயம் உள்ளதா? ஏன் இறையுணர்வைத் தரவில்லை இந்த இறை அருள்?   இறையுணர்வு என்பது என்ன?  இக்காலப் பிரம்ம ரிஷி அவர்கள் கூறும் இறையுணர்விற்கான வரையறையை நினைவில் கொண்டு வந்தால் இந்த ஐயம் தீர்ந்துவிடும்.

       ” அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி, அறம் காக்கும் தகமையே இறையுணர்வு” என்கிறாரே நம்  பிரம்ம ரிஷி அவர்கள்.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறையருளில் அவர் கூறும் இறையுணர்வு கிடைக்க வில்லையா?  நல்ல பயனுள்ள அறச்செயல்கள் என்றுதான் ஆரம்பித்திருக்கிறார்.

      சரி.  உலகியல் வாழ்க்கைக்கு என்ன தரும் இந்த இறையருள் என ஐயம் உள்ளதா?  இந்த ஐந்தையும் வைத்து உலகியல் வாழ்க்கை நடத்த முடியாதா?  செல்வம் அளிக்கவில்லையே இவர் கூறும் இறை அருள் என்று நினைக்கீறீர்களா!  உலகியல் வாழ்க்கைக்கு வேண்டியதை இந்த இறை அருள் தரவில்லையே என நினைக்க வேண்டாம். காப்பு, வெற்றி, மகிழ்ச்சி, நிறைவு ஆகியவைகளெல்லாம் உலகியல் வாழ்க்கைக்குத் தேவைதானே.  செல்வம் ஈட்ட வேண்டுமானால் உழைக்க வேண்டும். அங்கே இக்காலப் பிரம்ம ரிஷி கூறும் இறையருள் வெற்றியைத் தருவதால் நிறைசெல்வம் வந்துவிடுகின்றது.  பிரம்ம ரிஷி அவர்கள் கூறுவது போல், உலகியல் வாழ்க்கையில் கடைசிவரை, ஓயாது, இன்னும் இன்னும் வேண்டும் என பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பத்தில் புகுந்தழுந்தி புண்ணாக்கிவிட்ட மனதிற்கு நிறைவைத் தந்து மனதை ஆற்றுமே நல்ல பயனுள்ளச் செயல்களும் அதற்கேற்ற எண்ணங்களுக்கான விளைவுகளும்.  ஆகவே இந்த விளைவு   இறை அருள் கொடுத்ததில்லையா?  நிறைமனமும் இறைமனமும் ஒன்றுதானே!  நிறைமனமே இறைமனம்.

                                                                                               ….நாளைத் தொடர்வோம்.

     

     

    Loading

  • இறை அருள் பெற…….3 / ?

    வாழ்க மனித அறிவு                                                                              வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற…….3 / ?FFC  – 31

     02-12-2014

         நிறுவனங்களில் பல ஊழியா்கள் பணியாற்றுகிறார்கள்.   அவர்களில் ஒரு சிலருக்குப்   பிறருடைய புகழை தன்னுடையதாக்கிக் கொள்ளும் எண்ணம் எங்கிருந்து வந்தது?  பிறர் வளம் பறித்தலாகிய விலங்கினப் பண்பிலிருந்து வந்தது.  கொலை செய்வதுதான் விலங்கினப் பண்பு என்பது கிடையாது. பிறருக்குரியதைத் தான் அபகரிப்பது கூட பிறர் வளம் பறித்தலாகிய விலங்கினப் பண்பிலிருந்துதான் வந்துள்ளது,  மகரிஷி அவர்கள் காந்த தத்துவம் என்கின்ற நூலில், மனத்தூய்மை என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவியின் எட்டு வரிகளைில் முதல் மூன்று  வரிகளைக் கவனிப்போம்.

                                   மனத்தூய்மை

                 பொருள் புகழ் செல்வாக்கு புலன் இன்பம் நான்கிலே

                   புகுந்தழுந்தி மனித மனம் புண்ணாய் வருந்துவோர்

                 இருள் நீங்கி இன்பமுற என் விளக்கம் கூறுவேன்   என்று கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

        பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் ஆகியவைகளைக் கவர்ந்து கொள்ளும் ஆசை பெருகியதற்கானக் காரணம் மனிதருக்குள் பிறவி தோறும் சேர்ந்து, சேர்ந்து மூட்டையாக வந்திருக்கின்ற சஞ்சித வினைகளாக வந்திருக்கும் விலங்கினப் பதிவுகளாகிய பறித்துண்டு வாழும் தன்மைதான் என்கிறார்.  ஆகவே  இறை அருள் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை ஆராய்வோம்.

        

         பொதுவாக எதற்காக இறைவழிபாடு செய்யப்படுகின்றது? இறைவன் தனக்குத்  தேவையானவைகளைக் கொடுக்கிறான் என்பதற்காக, நன்றி உணர்வாக இறைவழிபாடு செய்யப்படுகின்றது.  இறைவனிடம் வேண்டுதல் வைத்து இறைவழிபாடு நடத்தப்படுகின்றது.  வேண்டுதல் நிறைவேறும்போது காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன.  ஆனால் இணக்கத்துடன் கூடிய இறைவழிபாடு நடப்பதில்லை.  இணக்கத்துடன் என்றால் யாரிடம் இணக்கம் வேண்டும்?  இறையுடன் இணக்கம் வேண்டும்.   அன்பும் கருணையுமான இறையுடன் இணக்கம் என்பது மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும்  அன்பும் கருணையுமாக இருக்க வேண்டும்.  அன்பும் கருணையுமான முத்தொழில்களால் தானாகிய இறையே, மற்றும் மற்ற உயிர்களான இறையே  பயன் அடைவதால் அதுவேதான் பேரிறைக்கு(இறைக்கு) இணக்கமான வழிபாடாகும் என்பதனை சிந்தித்துப்பா்த்து செயல்படவேண்டும்.

          பக்திமான்கள்  இறையிடம்  அருளை வேண்டுகின்றனர்.  மற்றவர்கள்  அருளைத்தவிர மற்றவைகளை வேண்டுகின்றனா்?   அருள் என்றால் இறைவனின் கருணை என்று பொருள்.  கருணை என்றால்  சிலைவடிவிலே இறையை வணங்கும்  பக்திமான்கள் இறைவனின் நேரிடைத் தரிசனத்திற்காக இறை அருளை வேண்டுகின்றனா்.

            அருள் என்றால் உயிர்களுக்கு இரங்கும் பண்பு என்று பொருள்.  துன்பம் முதலியவற்றைத் தீர்க்க வல்ல இறைவனின் அருள் என்று பொருள். அருள் என்பது இறைவன் கருணையுடன் தருதல்.  எப்போது இறைவன் தருவான்?  ”செயலிலே விளைவாக வருபவன் இறைவன்” என்றிருக்கும் போது, மனிதனின் செயல்களுக்கு ஏற்ற விளைவினைத் தருவான்.  செயல் இல்லாமல் விளைவு இல்லை. ஆகவே மனிதனின் நல்ல செயல்களுக்கு உடனேயும் அல்லது காலத்தாலும் விளைவைத் தருவான்.  இறையாகிய  பிற உயிர்களிடம் ஒருவன் அன்பும் கருணையுமில்லாத போது, இவனுக்கு எவ்வாறு இறையிடமிருந்து, இவனுடைய செயல்களுக்கான விளைவுகளாக அன்பும் கருணையும்(அருள்) வருவதற்கு  வாய்ப்பு  கிடைக்கும்?  .இங்கே மகரிஷி அவா்களின் வினாவினைக் கவனிப்போம்.

    சொல்லெங்கே?  செயலெங்கே?

               பல்லாயிரம் புழுக்கள்

                       பதைபதைக்க வதைத்தெடுத்தப்

                       பட்டு என்னும் பாப குறிப்பை உடுத்தி

               சொல்லாயிரம் கோர்த்துத்

                       துதிபாடி தெய்வத்தை

                       சொர்க்கலோகம் வேண்ட

                       சொல்லெங்கே?  செயலெங்கே?  என வினவுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

          எப்போது நல்ல செயல்கள் மனிதனிடமிருந்து வெளிப்படும்?  மனிதனின் அறிவு பரிணாமக் கசடுகளுடன் இருக்கும் வரை முழுவதுமாக நல்லசெயல்கள் வெளிவராது.  தங்கம் என்றால் எப்போதுமே பிரகாசிக்க  வேண்டும்.  சில நேரங்களில் பிரகாசிப்பது, சில நேரங்களில் மங்கலாக இருப்பது என்றிருக்காது. அதுபோல்   எப்போதும் மனிதனிடமிருந்து நல்ல செயல்கள் வெளிவரவேண்டும்.  இது இயலாத காரியம் என நினைத்தால்(practically/ideally impossible), தீய செயல்கள் செய்தால் தீய விளைவுகள் துன்பமாகவும் வரும்.  ஏற்கனவே ஊழின் காரணமாக துன்பங்களை அனுபவிப்பவா்களாவது இதனைக் கருத்தில் கொண்டு விழிப்போடு செயல்படுவார்களேயானால், அங்கே அவா்களுக்கு இறை அருள் வாயில் (ஞானம் பெறுவதற்கான) வாயில் திறந்து விட்டது என்று பொருள்.

        இறையே உயிரினங்களாகி பிறகு மனித அறிவாக வந்தபோது அதனுடன் விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பரித்துண்ணல் என்கின்ற பரிணாமக் கசடு வந்து விட்டது. பின்னர் அது பல கசடுகளாக மாறியுள்ளது.  எனவே தான் ஸ்கந்த குரு கவசத்தில் அதனை இயற்றிய மகான் ”காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்” என அருளியுள்ளார்.  பரிணாமக் கசடுகளான தன்முனைப்பு, தான், தனது என்கின்ற மாயக்கருத்து, அதானல் உருவான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை. வஞ்சம் ஆகியக் கசடுகள் மனிதனிடம் உருவாகிவிட்டன.

        இதனால் பொய், களவு, சூது. கற்பழிப்பு, கொலை ஆகிய ஐந்து பழிச் செயல்கள் உருவாகிவிட்டன.  பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்தி புண்ணாகிவிட்ட மனம் எவ்வாறு இறை அருளைப் பெறமுடியும்? இறையையே தன்னுடைய அறிவாக மனிதன் வைத்துக் கொண்டு இறை அருள் இல்லாமலும், இறைக்காப்பு இல்லாமலும் ஏன் துன்பப்படவேண்டும்?  ஆகவே மனிதன் தன்னுடைய பரிணாமக்  கசடுகளை நீக்கி அறிவை முழுமைப்படுத்த வேண்டும்( to perfect the consciousness).  நாளைத் தொடர்வோம். …….

    Loading