admin

Author Archives

  • FFC – 162-வினா விடை – 12-1/2

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    வினா விடை – 12-1/2

    FFC – 162

    10-02-2016—புதன்

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 132
    (05-12-2015—சனி)

    “நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே.”

    …. அர்னால்டு

    பயிற்சி—
    1) வேதாத்திரியம் எதனைக் கற்றுக் கொடுக்கின்றது?
    2) ஏன் அறிஞர் அர்னால்டு அறிவை அறியும் அறிவைக் கற்றுக் கொடுக்க எண்ணுகிறார்?
    3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறி “அன்பர்களே வாரீர்”
    என அழைக்கிறார்?
    4) ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா? இதன் பயன் என்ன?

    விடை:–
    1) வேதாத்திரியம் மனவளக்கலையின் வாயிலாக அறிவை அறியும் கலையைக் கற்றுக் கொடுக்கின்றது.
     மனவளக்கலை அறிவை அறியும் கலை.
     மனவளக்கலை மனிதனிடம் ஒழுக்கத்தை ஓங்கச்செய்யும் கலை.
     மனவளக்கலை சமுதாயத்தில் அறம் ஓங்கச்செய்யும் கலை.
     மனவளக்கலை மனக்கவலையை மாற்றக்கூடிய கலை.
     மனவளக்கலை மனிதனை தெய்வநிலைக்கு உய்விக்கும் கலை.
     மனவளக்கலை தெய்வத்தை அறிகின்ற கலை.
     மனவளக்கலை பேரின்பத்தை அனுபவிக்கும் கலை.
     மனவளக்கலை தனிமனித அமைதி, குடும்ப அமைதி மற்றும் உலகஅமைதிக்கும் வழிகாட்டும் கலை.
    2) எல்லோரும் விரும்புவது இன்பத்தையே அல்லவா!
    இன்பத்தை எது அனுபவிக்கின்றது?
    அறிவுதான் இன்ப-துன்பங்களை அனுபவிக்கின்றது.
    எனவே அறிவு இன்பத்தை மட்டுமே விரும்புகின்றது என்றால் அறிவு அதற்குரிய செயலை மட்டுமே செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்.
    அதற்கு அறிவு தன்னை தகுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
    அறிவு தன்னை தகுதி படுத்திக் கொள்வது என்பது அறிவு தன்னுடைய காரணப் பெயருக்கேற்ப அறிய வேண்டியதை அறியவேண்டும்.
    அறிய வேண்டியவைகளில் சிகரமானது தன்னையே அறிதலாகும்.
    அதாவது அறிவு அறிவையே அறிய வேண்டும்.

    பேரறிவு/இயற்கை/தெய்வம் தன்னுடைய தன்மாற்ற பயணத்தை ஐந்தறிவு சீவன்களோடு நிறுத்தி விடாமல், ஆறாம் அறிவு சீவனாக, ஆறாம் அறிவிற்காக புலன் எதனையும் உருவாக்கிக கொள்ளாமல் மனிதனாகவும் வந்துள்ளது. காரணம் என்ன? பிரபஞ்சத்தில் நடந்து கொண்டிருந்த(இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது) ஐவகை நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் ஆகியவற்றை உணா்வதற்காக ஒவ்வொரு புலன்களாக அதிகரித்துக் கொண்டு ஒன்றிலிருந்து ஐந்தறிவு சீவன்கள் வரை மலர்ச்சி பெற்றது.

    ஐவகை உணர்ச்சிகளையும் உணர்வதற்காக ஐந்தறிவு சீவன்களாக மலர்ச்சி அடைந்து, அதோடு தன்மாற்றத்தை நிறுத்திக் கொள்ளாமல் ஆறாம் அறிவு மனிதனாக ஏன் தன்மாற்றம் அடைந்தது என்று ஆராயும்போது கிடைக்கின்ற விடை என்ன?

    ஐந்து உணர்வுகளையும் உணர்கின்ற அறிவு எது,

    அது எங்கிருந்து வந்தது,

    அதன் மூல இருப்பிடம் எது என உணர்வதற்காகவே என்பதுதான் விடையாக கிடைக்கின்றது.

    வேறு ஏதாவது விடை உள்ளதா? இல்லை. ஆகவே ஆறாம் அறிவின் சிறப்பே அறிவு, தன்னையே உணரவேண்டும். தன்னை உணராமல் ஐவகை உணர்வுகளை மட்டுமே உணர்ந்து கொண்டிருக்கும் ஆறாம் அறிவு

     தன்நோக்கத்தை மறந்து புலன்இன்பங்களிலேயே மயக்கம் கொண்டு,
     ‘அளவு’ மற்றும் ‘முறை’ என்கின்ற இன்பத்தின் சாம்யத்தை(formula) மறந்து,
     புலன்களை துன்பப்பொறி/துன்பவலை(trap for sufferings) ஆக்கிக்கொண்டு சிக்கித்தவித்துக் கொண்டு,
     அடிமையாகி ‘உணர்ச்சியினை’ அரியணை ஏற்றி, மூலஅறிவை(இறையையே) வெளியே தள்ளிவிட்டது
    இவற்றிற்கு விதிவிலக்கு எல்லா வகையிலும் ஞானம் அடைந்த அறிவை அறிந்த அறிஞரே.

    யார் அந்த அறிஞர்? என் அவரை அறிஞர் என்கிறோம். அதற்கு ‘யாரை கலைஞர் என்கிறோம்’ என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கலையில் சிறந்து விளங்குபவரை அத்துறையின் பெயரைச் சொல்லி அத்துறையின் கலைஞர் என்போம். உதாரணம் – வயலின் வாசிப்பதில் சிறந்து விளங்குபவரை வயலின் கலைஞர் என்கிறோம். வீணையை வாசிப்பதில் சிறந்து விளங்குபவரை வீணைக்கலைஞர் அதுபோல் பொதுவாக அறிஞர் என்றால் யார் அவர்? கலைஞர் யார் என அழைப்பது போன்ற ஒப்புவமையில்(analogy)அறிவை அறியும் கலையில் தேர்ச்சி பெற்றவரை அறிஞர் எனலாம். அறிஞர்கள் யார் என்று, அறிவிற்கு இயலை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அறிவின் அறிவியல் அறிஞராகிய வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு கூர்வோம்.

                  அறிஞர் (17-12-53)
    அறிவின் இருப்பிடம், இயல்பு, இயக்கம்
    அறிந்து, ஒழுகுவோர் அறிஞர்கள் ஆவர்.
    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அறிவு தன்னை உணரா முன்னர் முழுமை பெறாமல் இருக்கின்றது. காரணம் விலங்கினப்பண்புகளை பதிவுகளாகக் கொண்டுள்ளது. அறிவு முழுமை பெறும்போதுதான் துன்பமிலா இன்பப் பெருவாழ்வையே அனுபவிக்க முடியும்.
    ஏற்கனவே அறியாமையால், அலட்சியத்தால், உணர்ச்சிவயத்தால் விளைவறியாது செயல்கள் செய்து,
    துன்பம் ஏதேனும் இப்போது வந்தாலும் அதனை எளிதாகவும், சாதுரியமாகவும் எதிர்கொள்ளும் ஆற்றலையும் திறமையையும் பெறமுடியும். அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகியவைகளை நீக்காமல் அறிவு எவ்வாறு இன்பத்தையே அனுபவகிக்க முடியும்?
    அறுகுணங்களான பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் மனிதனிடம் இருக்கும் போது எவ்வாறு இன்பத்தை மட்டும் அனுபவிக்க முடியும்?
    அறுகுணங்களின் பிறப்பிடம் ‘தான், தனது’ என்கின்ற எண்ணக் கோடுகள். அறுகுணங்கள் நீங்கினால் ‘தான், தனது’. என்கின்ற எண்ணக்கோடுகள் நீங்கும்.
    ‘தான், தனது’ என்கின்ற எண்ணக்கோடுகள் நீங்கினால் அதன் பிறப்பிடமான தன்முனைப்பு கரைந்துவிடும். தன்முனைப்பு கரைந்தால் தெய்வத்தைக் காணலாம். தெய்வத்தை மறைக்கும் திறை தன்முனைப்பே ஆகும்.
    3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் “அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற அன்பர்களே வாரீர்” என அழைக்கிறார். அவ்வாறு அழைக்கும் அழைப்புக் கவியினை நினைவு கூர்வோம் வாரீர்.

    அழைப்புக்கவி!1970)
    1644

    அன்பர்களே வாரீர்!
    அறிவின் இருப்பிடம்
    அறிந்து இன்பமுற, (அன்பர்களே)
    இன்பநிலையதை, ஏகநிலையதை,
    அன்பு நிலையதை
    அறிந்திடலாம் இன்று. (அன்பர்களே)

    ‘தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம்?’
    என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்.
    அன்றாட வாழ்க்கை அறிந் தனுபவிக்க
    இன்றேனும், விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்! (அன்பர்களே)

    பூரணதூலமும், பொருந்து சூக்குமம்,
    காரணமான கருவையு மறிந்து,
    ஆரணமான அணுவறிந்து சுடர்
    தாரக மவுன தவத்தில் நிலைபெற (அன்பர்களே)

    எத்தனை ஆயிரம் ஆயிரம் இன்பங்கள்!
    இவ்வுல கெங்கும், பேரண்ட முழுமையும்,
    அத்தன் அருளாட்சியாக நிறைந்துள்ளான்,
    அறிவை விரித்து, அனைத்தும் துய்த்தின்புற (அன்பர்களே)

    நீங்களும், உங்கள் அன்புக் குடும்பமும்,
    நீளாயுள், உடல்நலம், நிறைசெல்வம், மெய்ஞ்ஞானம்
    ஒங்கிச் சிறப்புற்று உள்ள நிறைவோடு
    உள்ளொளி பெருக்கி உண்மைப் பொருள் காண, (அன்பர்களே)

    … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    சுவாமி விவேகானந்தர் கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் பூரணத்துவத்தை வெளிக்கொண்டுவருவதாக இருக்க வேண்டும் என்றார்(Education is the manifestation of perfection already present in man).
    அவருக்கு இளவலான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கல்வியுடன் ஆன்மீகக்கல்வியையும் இணைத்துப் போதிக்கப்பட வேண்டும் என்கிறார். அதோடு நின்று விடாமல், அக்கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்கிறார். ஒரு பசுவிற்கு நான்கு கால்கள் இருப்பதுபோல், வேதாத்திரியம் கூறும் கல்வி நான்கு அங்கங்களைக் கொண்டாதாக இருக்க வேண்டும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அஃதாவன

    எழுத்தறிவு,
     தொழிலறிவு,
     ஒழுக்கப்பழக்க அறிவு,
     இயற்கை தத்துவ அறிவு ஆகியவையாகும்.

    ஏற்கனவே கல்வி நிலையங்கள் முதல் இரண்டையும் செய்து கொண்டு வருகின்றன. அத்துடன் கடைசி இரண்டையும் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    கடைசி இரண்டும்தான் அறிஞர் அர்னால்ட் அவர்கள் கூறும் ‘அறிவை அறியும் கல்வி.’ எனவே மகரிஷியின் இளவளான அர்னால்ட் அவர்கள், வேதாத்தரியம் கூறும் கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற விருப்பத்தில் இணைகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.
    ஆக மூன்று அறிஞர்களும் அவர்களின் ஒரே விருப்ப எண்ணத்தை வெவ்வேறு வார்த்தைகளாகக் கூறியிருக்கின்றனர்.
    மனிதனிடம் இல்லாத ஒன்றை வெளிக்கொண்டுவரமுடியாது. எனவே சுவாமி விவேகானந்தர் கூறுவது யாதெனில் மனிதன் இறையின் அங்கம் என்பதால் அவனிடம் இறையின் பூரணத்துவம் ஏற்கனவே மறைந்துள்ளது. அதனை வெளிக்கொணரும்படியான கல்விவேண்டும் என்கிறார்.
    மனிதனிடம் ஏற்கனவே உள்ள பூரணத்துவம் எவ்வாறு கொண்டுவர முடியும் என்று ஆராயும்போது ஸ்ரீ ரமண மகரிஷியின் பக்தர்கள், அவரிடம் வந்து, தங்கள் துயரங்களைக்கூறி ஆசீர்வதிக்கும்படி வேண்டும்போது ‘நீ யார் எனக்கண்டுபிடி-Find out who you are’ என ஆசிர்வதித்தது அனுப்புவது நினைவிற்கு வருகின்றது. எனவே ஸ்ரீ ரமண மகரிஷி அவர்கள் துயரங்கள் நீங்க ‘நீ யார் எனக்கண்டுபிடி’ என்று ஆசீர்வதித்ததன் நோக்கம் ஒவ்வொருவரும் அறிவை அறியும் கல்வியில் தேர்ச்சி பெறவேண்டும், அவ்வாறு தேர்ச்சி பெறுவதால் அவர்களது துயரங்கள் நீங்கும் என்பதே. இதனையே அறிஞர் திருவள்ளுவர் கடவுள்வாழ்த்து அதிகாரத்தில் ஏழாவது குறளாக அருளியுள்ளதனை நினைவுகூர்வோம்.

    “தனக்குவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.“ குறள் எண் 7

    இயற்கையின்ஆதிநிலை/இறைநிலை/அறிவிற்கெல்லாம் மூலநிலை அறிந்து, அதன் வழி வாழ்ந்தால் அன்றி வேறு எந்த வகையிலும் மனக்கவலை மாறாது என்று கருணையோடு எடுத்து இயம்புகிறார் அறிஞர் திருவள்ளுவர்.
    மேலும் திருவள்ளுவருக்கு முன்னரே, அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அறிஞர் சாக்ரடீஸ் அவர்கள் இளைஞர்களை அழைத்து அவர்களிடம ‘உன்னையே நீ அறிவாய்’ என்று கூறுவாராம் என்பதனை தெரிந்து கொள்ளும்போது ஐந்து அறிஞர்களின் விருப்ப எண்ணமும் ஒன்றாகவே அமைந்துள்ளது.
    இப்போது அத்தகைய புனிதமாகிய விருப்ப எண்ணத்தில் லட்சக்கணக்கில் மனவளக்கலைஞர்களும் இணைந்துள்ளனர் என்பது இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடுதான் இயற்கையின் சரித்திரத்தை/இறையையே அறியும் மனவளக்கலையாகும்.

    எனவேதான் அறிஞர் அர்னால்டு “நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே.” என்கிறார்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(14-02-2016 ஞாயிறு) நான்காவது கேள்வியான ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா? இதன் பயன் என்ன? என்பதற்கான விடையினை அறிவோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்           வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-149

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    08-02-2016 – திங்கள்

    ஞானத்தை உருவாக்கும் தெளிவு என்று எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 161-வினா விடை – 11—(3/3)

    வினா விடை – 11—(3/3) 

    FFC – 161

    07-02-2016—ஞாயிறு

    சென்ற அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சி–

    சிந்திக்க அமுத மொழிகள்- 131
    (04-12-2015—வெள்ளி)

    தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.

    ….. புத்தர்

    இன்றைய சிந்தனையில் பழக்கம் பழகிவிட்டால் அதனை விட்டுவிடுவதில் என்னென்ன சிரமங்கள் உள்ளன என அறிந்துகொள்வோம். மேலும், ஒரு கேள்விக்கு இத்தனை நீண்ட விடை அவசியமா எனவும் அறிந்து கொள்வோம். .

    ஆரம்பத்தில் பழக்கம் சிலந்தி வலைபோல் வலிமையற்று இருக்கும். அதாவது அறியாமையால், தீமைதரும் பழக்கத்தை கொண்டிருந்தால், அதனை ஆரம்பத்திலேயே அறவே நிறுத்திவிட பழகவேண்டும். தீமை தரும் பழக்கத்தை நிறுத்தவும் பழகவேண்டியிருக்கின்றது/ அவசியமாகின்றது. தீய பழக்கத்தை நிறுத்தாமல், அது தொடரப்படுமானால் அது தேரை இழுக்கும் கயிறுபோல் வலிமையுடையதாகிவிடும். அந்நிலையில் தீயபழக்கத்தை கைவிட போராட வேண்டியிருக்கும். அதில் ஒருசிலரால் மட்டுமே வெற்றிகொள்ள முடிகின்றது. மற்றவர்களோ வாழ்நாள் முழுவதும் தீயபழக்கத்திற்கு அடிமையாகி உடலாலும், உள்ளத்தாலும் மற்றும் நட்புநலமில்லாமலும் துன்பத்தையே அனுபவிக்க நேரிடுகின்றது. இந்த உண்மைக்குத் தொடர்புள்ள வேறு அறிஞர்களின் பொன்மொழிகளை நினைவு படுத்திக் கொள்வோம்.

    முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.
    . . . ஸ்பானியப் பழமொழி
    நல்ல குழந்தைகளை உருவாக்க பெற்றோர்கள் நல்லவர்களாக வாழவேண்டும்.
    பெற்றோர்களின் வாழ்க்கை குழந்தைகளின் பாடப் புத்தகமாக அமைகிறது.
    . . . அறிஞர் ஆர்னால்ட் பென்னெட்.
    பெற்றோர்கள் குழந்தைகளின் நிரந்தரமான ஆசிரியா்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது.
    . . . அறிஞர் எம்.கோர்க்கி.
    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக்கொண்டிருக்கும் சீவன் மனிதன்.
    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    குறிப்பு:-

    தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.’ என்கின்ற புத்தரின் அமுதமொழியை ஆழ்ந்த விரிந்த சிந்தனைக்கு உட்படுத்துவதற்கான பயிற்சியாக ‘அறிந்து கொள்ள வேண்டியது என்ன?’ என்கின்ற வினா கேட்கப்பட்டுள்ளது?
    அறிஞர்களின் அமுதமொழிகள் பொதுவாக அனைவருக்குமே வாசிப்பதில் சுகமாகத்தான் இருக்கும். எனவே ‘அமுதமொழி’ நன்றாக இருக்கின்றது என மனதளவில் சொல்லிவிட்டும் அனுபவித்துவிட்டும் சென்று விடக்கூடாது. ஏனெனில் அறிஞர்களின் பொன்மொழிகள் ஒரு நாளில் தீடீரென்று உதிர்க்கப்படுவதில்லை. நீண்ட நாள் ஆழ்ந்த, விரிந்த சிந்தனையின் பயனாக அமுதமொழிகள் உதிர்க்கப்படுகின்றன. அமுத மொழிகள் ஆழ்ந்த, விரிந்த சிந்தனையில் உதிப்பதால்> அந்த அமுதமொழியினை மொழிவதற்கு அவ்வறிஞருக்கு ஏற்பட்டுள்ள துணை சிந்தனைகள் எல்லாவற்றையும் வாசிப்பவரும் அறிந்து கொண்டு ரசிக்கவும், மதிக்கவும் வேண்டும். இவ்வாறு செய்துவர வாசிப்பவரும் அறிஞரின் சிந்தனைத்திறனுக்கு உயர்ந்து வருவார். இது இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றப்படி வாசிப்பவர் உயர்ந்து வருகிறார் என்பதனை உறுதிபடுத்துகின்றது.
    எனவே இவ்வாறெல்லாம் அமுத மொழியினை கண்ணுறும்போது ஆழ்ந்து, விரிந்தும் சிந்திக்க வேண்டுமா எனவும் ஐயம் எழலாம். இதற்கெல்லாம் பரபரப்பான உலகில் நேரம் இல்லையே என நினைக்கலாம். பழகிவிட்டால் அமுத மொழியினை வாசித்த உடனேயே அதனுடன் தொடர்புள்ள துணைச்சிந்தனைககள் பளிச்சிடும். வேறு அறிஞர்கள் யாராவது அந்த அமுதமொழியின் பொருளையொட்டி கூறயிருந்தாலும் இணைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் நொடி நேரப்பழக்கம் அந்த அமுத மொழியை தன்னுடையதாக்கிவிடும். ஒரு வேளை அந்த அமுதமொழியின்படி வாழ்க்கை வாழாமலிருந்தால், விளக்கம் உறுதியாகி உடனே அவ்வாறே வாழ்வதற்கு அறிவு தொடர் விடாமுயற்சி எடுக்கும். விளக்கம் உறுதியாகிவிடுவதால் பழக்கப்பதிவு தோற்கடிக்கப்பட்டு விளக்கப்பதிவு வெற்றி பெறும். இது விளங்குகின்றதால்லவா!
    புத்தர் கூறுவதென்ன? ‘தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.’ என்கிறார் புத்தர். அதாவது ‘தீமை தீங்கு செய்யாத வரையில்’ என்றால், அதற்கு முன்னர், ஆரம்பத்தில் நன்மையை, அதாவது சுகத்தை கொடுத்திருக்கின்றது. அதனால் அதில் மூழ்கி இறங்கிவிட்டான். ஆனால் இப்போது (பின்னர்)அது தீமையைத் தர ஆரம்பித்திருக்கின்றது. எனவே இதனை பின்னர் துன்பத்தை தரும் என்று முன்கூட்டியே அறியாதவனை முட்டாள் என்கிறார் புத்தர். ஏன் அவன் முட்டாளாக இருக்கின்றான் என்று ஆழ்ந்து, விரிந்து சிந்தித்தால் நமக்கு தெளிவாவது என்ன?
    அவன் அறிவு கூர்மையாக இல்லை. ஆறாம் அறிவின் சிறப்புத்திறனான ‘நுண்மான் நுழைபுலன்’ மேலோங்கவில்லை. மேலும் பேரறிவே ஆறாம் அறிவாக தன்மாற்றம் அடைந்திருந்தாலும் அது நேரிடையாக ஆறாம் அறிவாக தன்மாற்றமடையவில்லை. ஒரறிவிலிருந்து ஐந்தறிவாக சீவன்களாக வந்த பிறகுதான் ஆறாம் அறிவான மனிதனாக தன்மாற்றம் அடைந்துள்ளது. எனவே ஆறாம் அறிவின் தன்மைகள் முழுவதுமாக மேலோங்காமல் மனிதனுக்கு முந்தைய பிறவிகளான விலங்கினப் பண்புகளே மேலோங்கி உள்ளன.

    புத்தரின் இந்த அமுதமொழியால் நாம் ஆழ்ந்து விரிந்த சிந்தனையின் அவசியத்தை அறிந்து கொண்டதன் விளைவாக
    1) அறிவுக் கூர்மையின் அவசியம்,
    2) அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் பற்றி
    ஏற்கனவே தெரிந்திருந்தாலும், மேலும் விரிவாகவும் அறிய வேண்டியது அவசியம்,
    3) திருவள்ளுவரின் அறிவுக்கான வரையறையைக் கூறும் இரண்டு குறட்பாக்களை நினைவு படுத்திக் கொண்டதால் திருவள்ளுவரோடு இணைந்து கொண்டோம்.
    4) திருவள்ளுவரோடு இணைவதோடு மட்டும் இல்லாமல் நம் குருநாதரின் பாடலை நினைவு கூர்ந்ததால் அவரோடும் இணைந்து கொண்டோம்.
    5) மற்ற அறிஞர்களின் அமுத மொழிகளோடும், பழமொழிகளோடும் இணைத்துப்பார்த்து புத்தரின் இந்த அமுதமொழியினை மொழிவதற்கு புத்தர் உறுதிபடுத்தியதுபோல் நாமும் இந்த அமுத மொழியினை உறுதிபடுத்தி நமதாக்கிக் கொண்டோம். அதோடு மட்டுமல்ல, புத்தர் இப்போது இருந்து நேராக சமுதாயத்திற்கு சொன்னால் என்ன பயன் ஏற்படுமோ அதே பயனை நாம் இப்பழமொழியினை பிறர்க்கு எடுத்துச் சொல்வதில் ஏற்படுத்த முடிகின்றது. வாழ்க வளமுடன் வாழ்வ மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம். இத்துடன் இன்றைய இத்துடன் முடித்துக் கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில் (07-02-2016 – ஞாயிறு) கூடுவோம்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(07-02-2016 ஞாயிறு) “நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே” என்று அறிஞர் அர்னால்டு அவர்களின் பழமொழியின் பயிற்சிக்காக கேட்கப்பட்டிருந்த கீழ் கண்டுள்ள வினாக்களுக்கான விடைகளை அறிவோம்.
    1) வேதாத்திரியம் எதனைக் கற்றுக் கொடுக்கின்றது?
    2) ஏன் அறிஞர் அர்னால்டு அறிவை அறியும் அறிவைக் கற்றுக் கொடுக்க எண்ணுகிறார்?
    3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறி “அன்பர்களே வாரீர்”  என அழைக்கிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்.

    Loading